31 December 2011

நினைவுகள் -3

நானும் அப்பாவும்

என் அப்பா இறந்தது 2011 ஜனவரி மாதம் 9 ம் தேதி. அவரது நினைவு நாள் 29 ம் தேதி வந்தது. நான் தினமும் ஒரு தலைப்பில் அப்பாவும் - அவருடன் சம்மந்தம் உள்ளவர்கள் என்ற தலைப்பில் அதாவது அப்பாவும் அம்மாவும், அப்பாவும் தம்பியும் என்று எழுதுவதாக இருந்தேன்.

ஆனால் ஜெயமோகன், சாரு நிவேதிதா எழுத்துகளுக்கு வரும் எதிர்ப்பு போல் வந்ததால், அதுவும் சொன்னவர் என்னை விட என் அப்பா மேல் ப்ரியம் கொண்டவர் என்பதால் எனக்கும் அவருக்குமான உலகத்தை பற்றி மட்டும் எழுதலாம் என்று எண்ணி உள்ளேன்.

************************************************************************************

என் அப்பாவை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு எப்பொழுதும் உடனே நினைவில் வருவது, எனக்கும் அவருக்குமான பேருந்து நிலைய சம்பவம்.

மரத்தின் வேர்கள் ஆழ பதிந்து மண்ணுக்குள் போய்விட்டாலும் அதன் இருப்பை பூத்து குலுங்கும் மலர்கள், கனிகள் மூலம் காட்டுவதை போல் என் மனதின் ஆழத்தில் புதைந்து விட்ட நினைவுகளில் ஒன்று.

நான் கல்லூரியில் சேர்ந்த வருடம். அப்பொழுது நாங்கள் புதியதாக வீடு ஒன்று கட்டிஇருந்தோம். ஒரு மத்தியதர வர்கத்திற்கு உண்டான பொருளாதார சிக்கல்கள். அதிலும் என் அம்மாவிற்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்று ஒரு கொள்கை. அந்த வருமானம் வேறு இல்லாத நிலைமை. அதன் காரணமாக மொத்த வீட்டிலும் நாங்களே குடி இருந்தோம்.

நானும் என் தம்பியும் எங்கள் அளவிற்கு மொசைக் அது இது என்று எங்கள் ஆசைகளை சொல்லி செலவை இழுத்து விட்டும் இருந்தோம். வங்கி கடன், அம்மாவின் நகை, இன்னும் கைமாத்து, கால்மாத்து என்று வாங்கி அதிக பாரம் ஏற்றிய வண்டியை இழுக்கும் மாடு போல் அப்பா பெருமூச்சு விட்டு கொண்டு இருந்த நேரம்.

தீபாவளிக்கு நான் விடுமுறைக்கு வந்து இருந்தேன். எப்பொழுதும் போல் சினிமா, கூத்து என்று தீபாவளி கழிந்தாலும், வறுமையின் நிறத்தை காட்டி கொண்டு இருந்தது. அப்பொழுது ராஞ்சியில் இருந்து ஒரு சப்ளையர் வந்து இருந்தார். நடு வீட்டில் உட்கார்ந்து 20,000 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தார். அன்று எங்கள் வெளி கடனும் அவ்வளவே.

வந்தவருக்கு நல்ல விருந்து, உபசாரம் எல்லாம் முடிந்தது. எனக்கு மனதுக்குள் ஒரு சந்தோசம். பணம் வர போகிறது. அப்பா நிறைய துணி எல்லாம் எடுத்து தருவார். ஏதோ தீபாவளி முடிஞ்சாவது நமக்கு பம்பர்தான் என்று வந்தவர்க்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தேன்.

எல்லாம் முடிந்து கிளம்பும் பொழுது அவரிடமே பணத்தை கொடுத்து "நீங்கள் வேலையை சரியாக முடியுங்கள் நான் கையெழுத்து போட்டு தாரேன் எனக்கு தேவையான வருமானம் எனக்கு வருது. அடிக்கடி நண்பராக எங்கள் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அவர் சென்ற பின் நான் என் அப்பாவுடன் சண்டை போட்டேன். கோன் ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று நினைத்த நேரத்தில் கையில் இருந்த குச்சி ஐசும் பறிக்கப்பட்ட குழந்தை போல் மனது துடித்து விட்டது. இன்றைக்கு போல் அன்று மனம் பக்குவப்படவில்லை. அனுபவங்கள்தானே வாழ்கையில் அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் அனுபவங்கள் கிடைத்து ஒரு மனிதனின் மனம் பக்குவபடும் போது வாழ்கையே முடிந்து விடுகிறது.

"லஞ்சமாக வரும் பணம் குடும்பத்தின் அமைதியை குலைத்து விடும். என் உழைப்பில் வராத பணத்தில் நான் குடும்பத்திற்கு எதுவும் செய்ய மாட்டேன்" என்று அப்பாவும், "அப்பாதான் அவ்வளவு சொல்றாரே, ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே" என்று அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் ஏர் ஓடாத நிலம் போல் இருந்த மனதில் எதுவும் ஏறவில்லை.

இரண்டு நாட்கள் வீட்டில் யாருடனும் சரியாக பேசவில்லை. என்னுடைய செயலால் எல்லோரும் இறுக்கமாகவே இருந்தார்கள். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு கிளம்பி போகும் பொழுது, என்னை பேருந்தில் ஏற்றி விட அப்பாவும் பேருந்து நிலையம் வந்தார்கள்.

உள்ளே நுழைந்து பேருந்தில் ஏற போகும் நேரத்தில் என் செருப்பின் வார் அறுந்து விட்டது. பக்கத்தில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. மனது உள்ளே இருந்த இறுக்கம் மனதின் வழியே வழிந்து கண்ணின் ஓரத்தில் கரை கட்டி நிற்கிறது. அந்த பணம் இருந்தால் இப்போ BATA விலே போய் வாங்கி இருக்கலாமே என்று மனது புலம்புகிறது.

ஒரே பார்வை என் அப்பாவை பார்த்தேன். அவர் எதுவும் பேசாமல் அவர் செருப்பை கழட்டி என்னை போட்டு கொள்ள சொல்லி விட்டு கையில் வைத்து இருந்த மாலை முரசு செய்தி தாளில் நான் கழட்டி போட்ட செருப்பை கையில் எடுத்து கொண்டு வெறும் காலில் நின்றார்.

அந்த செருப்பு எதுக்குப்பா? என்று கேட்டேன்.

வெளியிலே செருப்பு தைக்கறவன் இருப்பான், நான் தைத்து போட்டு கொள்கிறேன் என்று சொன்னார்.

எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர் அந்த மாதிரி எல்லாம் போட கூடியவர் அல்ல. மிகவும் stylish ஆக இருக்க கூடியவர்.

பரவாயில்லை அப்பா நான் அப்படியே அட்ஜஸ்ட் செய்து போட்டுகிட்டு காலேஜிக்கு போறேன், அங்கே போய் தைத்து கொள்றேன் என்று சொன்னேன்.

இல்லப்பா, எனக்கு செருப்பை தைத்து போட்டுகிறது பெரிய பிரச்சனை இல்லப்பா, ஆனால் என் பிள்ளைக்கு என் கொள்கையை புரிய வைக்க முடியவில்லை என்பது தான் எனக்கு வருத்தம். நான் எடுத்த முடிவு சரி என்கிறதை நீ ஒரு நாள் புரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

பேருந்து கிளம்ப ஹாரன் ஒலித்தது, ஓடி சென்று ஏறி கொண்டு என் இருக்கையில் அமர்ந்து அப்பாவை பார்த்தேன், அதே சிரித்த, கவலையே தெரியாத முகம். எப்போதும் போல் பேருந்து வேகம் எடுக்கும் வரையில் கூட நடந்து வருகிறார். கக்கத்தில் மாலை முரசு பேப்பருக்கு உள்ளே என் செருப்பு.

மாலை நேர வெயில் அவர் முகத்தில் பட கண்ணை இடுக்கி கொண்டு பேருந்து திரும்புவதை பார்த்து கொண்டு இருக்கிறார். எனக்கு தான் அவரது உருவம் மங்கலாக தெரிந்தது. இப்பொழுதும் என் கண்ணின் ஓரத்தில் நீர் இருந்தது ஆனால் அது எனக்கு வேண்டியது கிடைக்காதால் அல்ல, என் அப்பாவின் பிரியத்தால்.

பூக்கடையை விட்டு வந்தபின்பும் அந்த வாசம் நம் கூட வருவது போல் அப்பாவின் வார்த்தைகளும், அவரது ஏக்கம் நிறைந்த பார்வையும் என் கூடவே வந்தது.

லஞ்சம் வாங்குவது பாவம் என்பதை நான் உணர்ந்து விட்டேன் என்பதை தான் நான் அவரிடம் கடைசி வரையில் சொல்லவில்லை. சொல்லித்தான் என்னை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் என்றுமே இருந்தது இல்லை. எல்லாவற்றையும் சொல்லி விட்டால் அப்புறம் வாழ்கையில் ஏது சுவாரசியம்.







30 December 2011

நினைவுகள் -2

அப்பாவும் அம்மாவும்





எனக்கு தெரிய ஒருவருக்கு பிடிக்காததை இன்னொருவர் செய்ததே இல்லை. ஆனால் வெளியில் பார்க்கும் பொழுது அப்படி தெரியாது.



வருடத்திற்கு ஒரு சுற்றுலா, மூன்று மாதத்திற்கு ஒரு முறை சினிமாவும், ஓட்டலும், அப்போதைய fashion ல் புடவை, நகைகள் என்று என் அம்மாவிற்கு எந்த குறையும் வைக்காதவர்.

அவருக்கு சக்கரையும் உப்பும் குறைக்க வேண்டும் என்ற பின்பு அதே பத்திய சாப்பாட்டை இன்று வரையில் எந்த வியாதியும் இல்லாமல் சாப்பிடும் அம்மா.

இதை என்ன என்று சொல்வது.



என் அப்பா இறப்பதற்கு ஒரு 15 நாட்கள் முன்பு ஏதோ பேசி கொண்டு இருந்த பொழுது சொன்னார். " உங்க அம்மா இல்லைனா, இந்த குடும்பத்தை இவ்வளவு தூரம் வளர்த்து இருக்க முடியாது. அது எதையும் அனுபவிக்கவே இல்லை. இந்த ஏப்ரல் மாசம் பரீட்சை முடிந்தவுடன் நான், உங்க அம்மா, பிள்ளைங்க மட்டும் எங்கயாவது போய்ட்டு வர போறம், அதுக்கும் ஒரு சந்தோசமா இருக்கும் இல்லை" என்றார்.

ஏப்ரல் வந்து போய் விட்டது............

குறிப்பு: என் நண்பன் சரவணனுக்கு நான் இப்படி எழுதியது பிடிக்கவில்லை என்ற காரணத்தால், அவனுக்கு ஆட்சேபம் என்று பட்ட பகுதிகளை நீக்கியபின் கட்டுரை.









29 December 2011

நினைவுகள் -1

அன்புள்ள அப்பா




சட்டமிட்ட
படத்திற்கு ஒரு மாலை
பாட்டன்
முப்பாட்டன்
பெயர் சொல்லி
பிண்டம் வைத்து
படையல் போட்டு
அப்பா
உங்கள் நினைவு நாள்
நிறைந்து விட்டது.
******
அவ்வளவு தானா அப்பா!!!!!
அழகாய் மடித்து
சட்டை பைக்குள்
வைக்கப்பட்ட
கைக்குட்டையை
போல்
மனதின்
உணர்வின்
ஆழத்தில் நீங்கள்.......
*************
நல்ல புத்தகம்,
நல்ல இசை,
காலை செய்தித்தாள்
என உங்கள் நினைவுகள்,
கைதேர்ந்த
ஒரு மந்திரவாதியின்
தொப்பியின்
உள்ளே இருந்து
வெளி வரும்
பூக்களை போல்
முயலை போல்
வந்து கொண்டே உள்ளது.
************
மறந்தால் தானே
நினைவு நாள்?
***************
எப்படி இருக்கிறீர்கள் அப்பா.






27 December 2011

முடிவின் ஆரம்பம்




முடிவின் ஆரம்பம்


கொட்டும் அருவியாய்
உன்
நினைவு துளிகள்
என் மனவெளியில்.

மனவெளியில் இருள்
சூழும் பொழுது
என் உணர்வு விட்டு
வேறு உலகம் புக
நீ
தெரிகிறாய்
ஒற்றை வெள்ளியாய்
வானத்தில்.

வானத்தில்
அலையும் மேகங்கள்
விளையாடும் விண்மீன்கள்
உன்னை
தேடி தவிக்கும்
நான்.

நான் தேடுவது
உன்னையா
என்
நம்பிக்கையையா?

நம்பிக்கையும்
நீயும்
ஒன்றாய்
தெரிய
பிரகாசமாய்
என் மனவெளி.

மனவெளி எங்கும்
மீண்டும்
உன்
நினைவுகள்
கொட்டும் அருவியாய்


23 December 2011

மௌனகுரு - திரைவிமர்சனம்

பார்த்தது - 19

மௌன குரு

நடிகர்கள்: அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ்கான் .
இசை: தமன்
ஒளிபதிவு: மகேஷ் முத்துசாமி
தயாரிப்பு: மோகனா மூவீஸ்
பார்த்தது: முத்துராம் - திருநெல்வேலி (10 பேர் மட்டுமே இரவு காட்சியில்)

சமீபத்தில் வந்த ஒரு நல்ல த்ரில்லர் வகை படம் என்று சொல்லலாம். நல்ல திரைகதை, தப்பான நேரத்தில் மோசமான குத்து பாடல் இல்லாதது, காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ற ஒளிபதிவு. விறுவிறுப்பான பட தொகுப்பு. பன்ச் வசனங்களோ பேசாத ஹீரோ என்று படத்தில் சொல்ல தகுந்த விஷயங்கள் நிறைய உள்ளது.

ஒரு சமூகத்துடன் சமரசம் செய்ய முடியாமலும், செய்ய வேண்டிய நிர்பந்தத்திலும் உள்ள ஒரு இளைஞனின் உணர்வுகளை மிக சிறப்பாக அருள்நிதி வெளி கொண்டு வந்து உள்ளார்.

உதயன் பார்த்தவுடன் இன்னும் ஒரு புரட்சி அல்லது எழுச்சி புயல் உருவாகி விட்டதோ என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் தான் இன்னும் ஒரு கதை நாயகனாகவே இருக்க விரும்புவதை சொல்லாமல் சொல்லி விட்டார். கதைக்கு நாயகன் தேடும் இயக்குனர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

ஒரு கடத்தல் மற்றும் கொலை விசயத்தில் சம்மந்தமே இல்லாமல் அருள்நிதி மாட்டி கொள்கிறார். அதில் சம்மந்த பட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை மன நிலை பாதிக்க பட்டவர் என்று சொல்லி மன நல காப்பகத்தில் அடைத்து விடுகிறார்கள். (போராளி கதை போலவே) அதில் இருந்து தப்பி தன்னை நிருபித்து கொள்வது தான் கதை.

நடிகர்கள் தேர்வு மிக அருமை. வடிவேலுவை அட்ரஸ் கேட்டு அலற வைத்த கிருஷ்ணமூர்த்தி, ஜான் விஜய், செல்வம் மற்றும் ராஜேந்திரன் என்ற பெயரில் வரும் இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து எல்லா கெட்ட காரியங்களையும் செய்கிறார்கள். வில்லன் வேசத்திற்கு மிக அருமையான ஆட்கள்.

அதே போல மன நிலை காப்பகத்தில் இருந்து அருள்நிதி உடன் தப்பித்து வரும் நபர் மிக அருமையாக நடித்து உள்ளார்.

நல்ல போலீஸ் பழனி அம்மாளாக வரும் உமா ரியாஸ் மிக அருமை. ஆர்ப்பாட்டம் இல்லாத அதே நேரம் ஒரு யதார்த்தமான பெண் போலிசை அடையாள படுத்தி உள்ளார். இத்தனை காலம் ஒரு திறமையான நடிகையை தமிழ் திரை உலகம் பயன் படுத்தி கொள்ளவில்லை. உமா ரியாசின் அம்மா கமலாவை கடைசி வரையில் அழ வைத்தே பார்த்து சலித்து போனது போல் இல்லாமல் இவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையட்டும்.

சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் ஒரு நல்ல படம்.

மௌன குரு - உரக்க பேசுகிறான்.

16 December 2011

ஒஸ்தி - திரை விமர்சனம்

பார்த்தது - 18

ஒஸ்தி

நடிகர்கள்: STR என்கிற சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி, நாசர்.

இசை: தமன்

இயக்கம்: தரணி

பார்த்தது : வரதராஜா- சிட்லபாக்கம் - சென்னை


ஒரு குப்பை படத்தை மீண்டும் ரொம்ப குப்பையாக எடுத்து இருக்கிறார்கள். சிம்பு police உடையில் வருவதை பார்த்தால், நாம் வீட்டில் குழந்தைகளுக்கு டாக்டர், ராணுவ வீரன் போன்று மாறு வேட போட்டிக்கு தயார் செய்வது போல் இருக்கிறது.

ஹிந்தி மிகவும் பிரபலமான பாடல் முன்னி - அதனை மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஆட வைத்து உள்ளார்கள். ஹிந்தி மொழி புரியாவிட்டாலும் நடனம் அருமையா இருந்தது, இதில் சுத்த வேஸ்ட். அந்த பாடலுக்கு L.R. ஈஸ்வரியை பாட வைத்து உள்ளார்கள். படம் முடிந்து வெளியில் வந்த பொழுது டீ கடையில் " பட்டத்து ராணியில் " கிறக்கமாய் இழுத்து கொண்டு இருந்தார். கல்லசா என்று கோரஸ் பாடுபவர்கள் குரலில் இருந்த கிக் கூட LRE இடம் இல்லை. அவரை சொல்லி எந்த குறையும் இல்லை. அவர் வயது!!!!! அதில் மிக கொடுமையானது TR இன் குரல் தான்.

ரிச்சா - மயக்கம் என்ன படத்தில் கொடுத்த performance க்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ரோல். ரிச்சா இது மாதிரி படங்களில் நடிப்பதை தவிர்த்தால் ஒரு ரவுண்டு வரலாம். இல்லையேல் அவரது பெயரை போலவே கங்கை கரையில் பாடம் சொல்லி கொடுக்க போக வேண்டியது தான்.

தில், தூள், கில்லி பட இயக்குனரின் வெற்றி படைப்பு என்று விளம்பரம் கொடுத்தவர்கள் குருவி படத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. அதற்கு சமமான ஒரு படம். தரணி சார் என்ன ஆச்சு?

பாடல்கள் சுமார். சந்தானம் காமெடி நன்றாக உள்ளது.

நல்ல A/c யும், ஒரு பிரமாண்டமான லுக்கும் உள்ள ஸ்க்ரீனில் பார்த்தது மட்டுமே இந்த படம் பார்த்ததில் உள்ள ஒரு நல்ல அனுபவம்.

ஒஸ்தி - நாஸ்தி

06 December 2011

படைத்தது -6

எனக்கொரு தீவு வேண்டும்

உன்னிலிருந்து தூரமாய்
என்னிலிருந்து தூரமாய்
கடலுக்கு அப்பால்
காற்றுக்கு அப்பால்
மலையை தாண்டி
எனக்கொரு தீவு வேண்டும்

கர்வத்தை தணித்து
மன ஓலத்தை தணித்து
என்னில் இருக்கும்
உன்னை தேடி...
உன்னை மட்டும் தேடி
உணர
எனக்கொரு தீவு வேண்டும்.

உன்னை உணர்ந்து
என் மனவெளி எங்கும்
உன் அன்பை உணர்ந்து
எனக்கான காதலை
நீ உணர்ந்து
நான் வாழ
எனக்கொரு தீவு வேண்டும்.

அது வரையிலும்
நீயும் நானும்
ஒரே கூரையில்
தீவாய் வாழ்வோம்.

08 October 2011

தேர்தல் திருவிழா

படைத்தது - 5
தேர்தல் திருவிழா

கடந்த 40 ஆண்டுகால அரசியலை எடுத்து கொண்டால் தமிழ்நாட்டில் அரசியல் செய்தவர்கள் எல்லாம் ஒன்று கருணாநிதியை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தான் அரசியல் செய்து வந்து உள்ளார்கள்.

ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் இனி அரசியல் களம் ஜெயலலிதாவா - விஜயகாந்தா என்று மாறும் என்றே அனைவரும் எதிர்பார்தார்கள். ஆனால் கருணாநிதியோ நாங்கள் தனித்து போட்டியிட போகின்றோம் என்று சொல்லி தமிழக அரசியல் போக்கினை மாற்றி விட்டார்.

இந்த தேர்தலில் அதனால் ஜெயலலிதாவும் தனித்து போட்டி என்று சொல்லாமல் சொல்லி விட்டார். சென்ற தேர்தலில் வைகோவிற்கு அவமானம் நடந்த பொழுது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சீட்டு வாங்கிய கம்யூனிஸ்ட், இந்த முறை அவமானப்பட்டு திரும்பியது. குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என்ற எக்ஸ்ட்ரா புலம்பல் வேறு. தேமுதிகவிருக்கு அழைப்பு கூட இல்லை. மீண்டும் கடவுளுடனும் மக்களுடனும் கூட்டணி வைக்க வேண்டியவரை கம்யூனிஸ்ட் காப்பாற்றி உள்ளது. அந்த முகாமிலோ "மேலாதிக்க மனப்பான்மையுடன்" நடந்து கொண்டதாக திமுக மீது வருத்தம் தெரிவிக்கிறார் திருமா. (ஆனால் இவர்கள் அனைவரும் மீண்டும் போயஸ் தோட்ட கதவையோ, கோபாலபுரத்து கதவையோ மீண்டும் தட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.)

இந்த தேர்தலில் தனித்து போட்டி என்று முடிவு எடுத்தது மூலமாக திமுக சாதித்து என்ன?

1. எந்தவொரு தொண்டர் அமைப்பும், கிராமங்களில் கிளை அமைப்பும் இல்லாத காங்கிரஸ் இதுவரையில் எல்லா கூட்டணியிலும் இரண்டாவது இடத்தை பெற்று வந்தார்கள். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் அதனை மாற்றி அமைக்க கூடும். மேலும் அவர்களின் பேரம் பேசும் (Bargaining Capacity) திறனை குறைக்க கூடும். எல்லா கட்சியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டு மோதுவார்கள், ஆனால் இங்கோ மிக பெரிய நகைசுவையாக மேயர் பதவியில் இருப்பவருக்கு சீட் கொடுத்தால் "நான் விருப்ப மனுவே கொடுக்கவில்லை எனக்கு சீட் வேண்டாம்" என்று சொல்லுகிறார்.

2. ஈழ தமிழர் குறித்தும், பேரறிவாளன் உட்பட மூவரின் மரணதண்டனை குறித்த தமிழ் அமைப்புகளின் தாக்குதலில் இருந்து காங்கிரசை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு இல்லை. (சீமான் அவர்களே எங்கே போய் விட்டீர்கள் ? காங்கிரசை கருவறுக்க வேண்டாமா?? )

3. சட்டசபை தேர்தலில் நடந்தது போல் சீட் பேரத்தின் வெப்பம் தாங்காமல் ராஜினாமா நாடகம் நடத்தவேண்டிய நிர்பந்தம் இல்லை.

4. தமிழகம் முழுவதும் தனியாக போட்டி இடுவதன் மூலமாக சுமார் 1. 5 லட்சம் கட்சிகாரார்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும். ஸ்டாலின், அழகிரி மற்றும் உள்ள எல்லா கோஷ்டிக்கும் சீட் கொடுத்து விடலாம். இன்றைய தேதியில் கட்சியால் தாங்கமுடியாத ஒரு விஷயம் உட்கட்சி கலகம். அது இதன் மூலமாக ஓரளவிற்கு தவிர்க்கப்படும்.

5. சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுகவே தனித்து போட்டி என்றால் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற நாம் ஏன் மீண்டும் கூட்டணி வைக் வேண்டும் என்று ஜெயலலிதா முடிவெடுப்பார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும், பல களம் கண்ட கருணாநிதிக்கு தெரியாத என்ன?

மேலும் பிற கட்சிகளுக்கும் இந்த தனித்து போட்டி என்ற முடிவு பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

1. கொஞ்சம் மனகசப்புகள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலுக்காக சகித்து கொண்டு காலத்தை ஓட்டிய விஜயகாந்துக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதிமுகவிற்கு மாற்றாக இரண்டாவது இடத்தில் இருப்பதாக நிருபிக்க வேண்டிய கட்டாயம் இப்பொழுது விஜயகாந்திற்கு வந்து விட்டது. தமிழக அரசியலில் தான் ஒரு மாற்று சக்தி என்பதை நிருபிக்க அவருக்கு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதனை பயன் படுத்தி கொள்ள அவர் தவறி விட்டார். அப்பொழுது வெளியில் வந்து கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் தமிழர் அமைப்புகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் இன்று நிலைமையே வேறாக இருந்து இருக்கும்.

2. திமுக, அதிமுக தவிர தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கிராமங்களிலும் கிளை கழகங்கள் உள்ள, பதவி சுகத்தை அறியாத தொண்டர்கள் உள்ள கட்சி மதிமுக. எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் அவமதிக்கப்பட்டே வந்து உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் பலத்தை நிருபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம். அவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியுமே அவர்களுக்கு பிளஸ் தான்.

3. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பாமக தனது உண்மையான பலத்தை அறிந்து கொள்ள அவர்களுக்கே ஒரு சந்தர்ப்பம்.

விடுதலை சிறுத்தைகள் உட்பட பல சிறிய கட்சிகளுக்கு ஒரு விண்ணப்பம்: ஒரு சீட்க்கும் இரண்டு சீட்டுக்கும் கொள்கைகளை விட்டு கூட்டணி வைக்காமல் தாங்கள் செல்வாக்காக இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு நன்றாக கள பணிகள் செய்து கட்சியை வளர்க்க உழைத்தாலே போதும். கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல இடத்தினை பிடிக்கலாம்.

பார்ப்போம் இந்த திருவிழாவில் யார் எல்லாம் காணாமல் போக போகிறார்கள் என்று.

(இந்த கட்டுரையில் இடம் பெற்று உள்ள கார்டூன்களை வரைந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்)

20 August 2011

பார்த்தது - 17


உயர் திரு 420

நடிகர்கள்: சிநேகன் , மேக்னாராஜ், வசீகரன்

இசை: மணிஷர்மா

வசனம்: ராதாகிருஷ்ணன்

கதை, திரைக்கதை,இயக்கம்: பிரேம்நாத்

தயாரிப்பு: R. சந்திரசேகரன் (Rich India Talkies)

பார்த்தது: மீனா (திருச்சி)


சிநேகன் ஒரு ஏமாற்று பேர்வழி. அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு முறை மேக்னாவையும் ஏமாற்றி விடுகிறார். தமிழ் சினிமா இலக்கணப்படி அவரையே காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார். சரி இனிமேல் ஏதோ திருப்பங்கள் வர போகிறது என்று நினைத்து உட்காரும்பொழுது, வசீகரன் - 5 நட்சதிர ஓட்டல் முதலாளி வருகிறார். அவருக்கு கடன் காரர்களுக்கு பதில் சொல்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இது போக பிரபல நடிகை ஒருவரை காதலிக்கிறார். (தமிழ் தெரியாத தமிழ் நடிகை என்று வேறு ஒரு பில்ட் அப்.

வசீகரனிடம், சிநேகன் வேலைக்கு சேருகிறார். ஆஹா இனிமேல் ஏமாற்று வேலைகள் நடக்க போகிறது என்று பார்த்தால் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இதற்கு இடையில் தயாரிப்பாளர் சந்திரசேகர் வேறு விஜயகாந்த் பாணியில் ஒரு full coat போட்டு கொண்டு ஒரு நாலைந்து பேருடன் குருக்கும் நெருக்கும் போகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் குழம்பி போய் விட்டார். ஊரையே ஏமாற்றும் சிநேகன், வசிகரனிடம் மட்டும் கடைசி வரை நல்லவராய் நடந்து கொண்டது ஏன்?
வரி கட்டுவதே முக்கிய வேலை என்றும் அதற்காகவே ம்பாதிக்கிறார் என்றும் சொல்லப்படும் சந்திரசேகர் ஏன் ஒரு ஏமாற்று பேர்வழியை தன் கூட அழைத்து செல்ல வேண்டும். மேக்னா கடைசியில் என்ன ஆனார்? பல கேள்விகளுக்கு விடை இல்லை.

பா. விஜய் போல் இன்னும் ஒரு கவிஞர், கதாநாயகன் ஆனார் என்பதை தவிர்த்து படத்தில் எதுவும் இல்லை. அருமையான தலைப்பு. அழகா பார்த்திபன் அல்லது ஜீவன் மாதிரி ஆட்களை போட்டு ஒரு விறு விறுப்பான கதையை கொடுத்து இருக்கலாம். நல்ல செலவு செய்து வெளி நாட்டில் எல்லாம் போய் படம் எடுத்தவர்கள் ஒரு நல்ல கதையும் அதற்கு ஒரு நல்ல திரைக்கதையும் அமைத்து இருக்கலாம்.

பாடல்கள் ஒன்றும் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு இல்லை. உயரம் குறைவான சிநேகனுடன் நடிக்க மேக்னா ரொம்பவே சிரமம் பட்டு இருப்பது பாடல் காட்சிகளில் தெரிகிறது. நல்ல வேளை சிநேகன் டான்ஸ் எல்லாம் ஆட முயற்சி செய்யாமல் ஒரு மாதிரி பாடல் காட்சிகளில் சமாளித்து விட்டார்.

ஒளிப்பதிவு D. சங்கர் என்று இருந்தது. இயக்குனர் மணிவண்ணனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரா என்று தெரியவில்லை. படத்தில் ஒரு freshness யை கடைசி வரை வைத்து இருந்தார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம் ஒளிப்பதிவிக்குஅப்புறமாக சிறப்பாக அமைத்த விஷயம் வசனம். நல்ல crispy ஆன வசனங்கள்.

படம் வெளியான மூன்றாவது நாள், ஞாயிற்று கிழமை வேறு, ஆனாலும் திரை அரங்கில் 42 பேர் கூட இல்லை. அதே சமயம் அதே வளாகத்தில் ஓடும் "காஞ்சானாவிற்கு" ஏகப்பட்ட கூட்டம். அந்த படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு தியேட்ரில் வேறு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து நல்ல பொழுது போக்கு படம் என்றால் மக்கள் திரை அரங்கிற்கு வந்து பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.

உயர்திரு 420 - நம்மை தண்டித்து விட்டார்கள்.


14 August 2011

படித்தது -3


அக்கரை சிவப்பு - ராஜேஷ் குமார்

அக்கரை சிவப்பு, பூமாலை நீயே, வாய்மையே வெல்லும் என்ற மூன்று குறு நாவல்கள் அடங்கிய ஒரு புத்தகம் படித்தேன். இதனை நாவல்கள் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் சுமார் 70 பக்கங்களில் எழுதப்படுவது நாவலா என்று எனக்கு தெரியவில்லை.

5 பாகங்களில் படித்த பொன்னியின் செல்வன், 2 பாகங்களில் படித்த கடல் புறாவை எல்லாம் கணக்கில் எடுத்தால் இந்த வகையான நாவல்களை எதில் வகை படுத்துவது என்று தெரியவில்லை.

ஆனால் இதுபோல் சுமார் 1500 நாவல்களை திரு. ராஜேஷ்குமார் எழுதி உள்ளார் என்பது தான் இதில் உள்ள சிறப்பு.

மூன்று குறு நாவல்களும் எப்பொழுதும் போல மிகவும் விறு விறுப்பாக இருந்தது. முதல் நாவலான அக்கரை சிவப்பில் - நித்யா என்ற பெண் துபாயில் வேலை பார்க்கும் அவளது கணவனை சந்திக்க போகும் போது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் ஒரு பார்செலினால் வரும் பிரச்சினைகளை பற்றிய கதை.

பூமாலை நீயே - மனித ரத்தத்தினை செயற்கையாக உருவாக்கும் ஒரு விஞ்ஞானி பற்றிய ஒரு கதை. ஏகப்பட்ட கொலைகள் செய்தும் அவரால் கடைசி வரைக்கும் செயற்கை ரத்தம் கண்டு பிடிக்க முடியாமல் போலீசில் மாட்டி கொள்ளுகிறார்.

வாய்மையே வெல்லும் - காதலனனின் மரணத்திற்காக பழி வாங்கும் காதலி பற்றிய ஒரு கதை.

திரு. ராஜேஷ்குமாரின் கதைகளில் எப்போதும் உள்ள விறுவிறுப்பு, அதிகப்படியான ஆங்கில கலப்பு வார்த்தைகள், தெளிவான எழுத்தோட்டம் அமைந்த ஒரு புத்தகம்.

ராஜேஷ்குமார் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பு எப்பொழுதும் அதனை நாம் கவலை படாமல் சிறுவர்களுக்கும் படிக்கக் கொடுக்கலாம். காரணம் அவரது எந்த நாவலும் ஆபாச கருத்துகளோ அல்லது தவறான வழிகாட்டுதலோ காட்டாது.









படைத்தது - 4

என்ன எழுதுவது?

ரொம்ப நாளாகிவிட்டது எழுதி. ஏனோ தெரியவில்லை காரில் பயணிக்கும் போதோ அல்லது வேறு வேலைகள் செய்யும் பொழுதோ இதனை இன்றே எழுத வேண்டும் என்று தோன்றும் ஆனால் இணையத்தில் உட்காரும் பொழுது வேறு எதையாவது பார்த்து விட்டு எழுதுவதை விட்டு விடுகிறேன்.

இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்து இருக்கிறேன். அதுவும் நேற்று திரு. அமிதாப் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை படித்த பிறகு அது மேலும் உறுதி ஆகி உள்ளது. அவருடைய வயதில், அவருடைய வேலை பளுவிலும் அவரால் தினம் எழுத முடியும் என்றால் நாம் ஏன் வாரம் ஒரு முறையாவது எழுத முயற்சி செய்ய கூடாது?

பார்ப்போம் புது வருடம் அன்று எடுக்கப்படும் தீர்மானம் போல் ஆகி விடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் diary எழுதுவது போல் ஆகாமல் இருக்க வேண்டும். ஜனவரி முதல் தேதி பக்கம் முழுவதும் எழுதி தள்ளுவோம். பத்து தேதி நெருங்கும் பொழுது "இன்று ஒன்றும் விசேசம் இல்லை" என்று எழுதுவோம். அப்புறம் பொங்கல் விடுமுறை கழிந்து அந்த diary எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருப்போம். அப்புறம் ஒரு பத்து நாள் கழித்து பார்த்தால் அது என் வீட்டுக்காரி மளிகை கணக்கு எழுதவோ அல்லது என் பையன் வீட்டு பாடம் எழுதவோ அல்லது என் தம்பி பொண்ணு படம் வரையவோ எடுத்து போய் இருப்பார்கள்.

அது போல் ஆகாமல் வாரம் ஒரு முறையாவது ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.

வாழ்வின் பெரிய இன்பங்களை தேடி கொண்டு செல்வதால் இது போன்ற மனதிற்கு பிடித்த சிறிய சந்தோசங்களை எப்பொழுதும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன். பெரியதாக அமிதாப்பை போல் தினமும் எழுத போகிறேன் என்று எல்லாம் சொல்லாமல் சிறிய இலக்குகளை நோக்கி துவங்குவோமே !!!!.

சந்தோசதிற்கான ரகசியம் மிக எளிமை ஆனது. நம்மை மகிழ்ச்சியில் ஆற்ற கூடிய விசயங்களை நாம் முதலில் கண்டு உணர வேண்டும். பின்பு அதனை நோக்கி நம்மை, நமது சக்தியை செலுத்தி கொண்டு போக வேண்டும். இதனை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறோம் என்பதுதான் பிரச்சினையே.







11 March 2011

படைத்தது -3

சூடிய பூ சூடற்கவும் கூட்ஸ் வண்டியும்

சாகித்திய அகாடமி பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு. சனவரி மாதம் நடந்த புத்தக சந்தையில் எனது நண்பன் சரவணன் வாங்கி கொடுத்தது. ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் படித்து கொண்டு இருந்த காரணத்தினால் இதனை உடனே படிக்க இயலவில்லை.

சரவணனும் நிதமும் "என்ன படித்தாகி விட்டதா " என்று கேட்டு கொண்டே இருந்தான். நானும் ப்ரன்சிஸ் கிருபா எழுதிய " கன்னி " நாவலை ஒரு வழியாக முடித்து இருந்தேன். அதனால் இதனை படித்து விடுவோம் என்று தாம்பரம் ரயில் நிலையத்தில் "மலைகோட்டை விரைவு வண்டிக்கு " காத்திருந்த போது படிக்க ஆரம்பித்தேன்.

முதல் இரண்டு கதைகள் படித்து இருந்த பொழுது ஒரு சரக்கு ரயில் - கூட்ஸ் வண்டி வந்தது. கதையின் வீச்சினை உள்வாங்கி கொண்டு இருந்த வேளையில் கூட்ஸ் வண்டி வந்து நடை மேடை முழுவதையும் அடைத்து கொண்டு நின்றது.

நான் படித்த இரண்டு கதைகளிலும் ரயில் வண்டி வந்து இருந்தது. அதே தாக்கத்தில் இருக்கும் பொழுது வந்த கூட்ஸ் வண்டி அதன் பங்கிற்கு எனது சிந்தனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது.

இரவு 11 மணி அளவில் கூட்ஸ் வண்டி மெதுவாக ரயில் நிலையத்தை கடந்தது. அந்த வண்டியின் கார்டு (GUARD) என்ன செய்வார் என்று ஒரு சந்தேகம். ஒட்டுனர்க்காவது வேலை இருக்கும் ஒரு சலிப்பு தட்டாது ஆனால் கார்ட்க்கு எப்படி இருக்கும். ரயில் நிலையங்களில் கொடி காட்டுவதை தவிர வேறு எதுவும் வேலை இருப்பது போல் தெரியவில்லை.

திடுமென்று ஒரு எண்ணம் நமக்கு இந்த வேலை கிடைத்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். நாம் விரும்பிய புத்தகங்களை எல்லாம் மிக சுலபமாக படித்து விடலாமே என்று தோன்றியது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது அதனால் கிண்டி ரயில் நிலைய வாசலில் ஒருவர் பழைய புத்தகங்கள் விற்பார். அவரிடம் வாங்கி படித்து விட்டு மீண்டும் விற்று விடுவோம்.

இன்றைக்கு லேன்ட் மார்க், ஒடிசி, ஹிகின் பாதம்ஸ் என்றுதான் புத்தகங்கள் வாங்குகிறோம் ஆனால் அமைதியாக படிக்ககூடிய நேரம் அமைவது இல்லை. இப்போ கூட்ஸ் வண்டி கார்டாக போய் இருந்தால் நிறைய படிக்கலாமே என்று ஒரு எண்ணம். மனம் ஒரு குரங்கு என்பது சரியாகதான் இருக்கிறது. இக்கரைக்கு அககரை பச்சை. அவரை கேட்டால் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.

ஆனால் "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை " என்று வைரமுத்து முதல் மரியாதை படத்தில் ஒரு பாடலில் எழுதி இருப்பார். அது போல்தான் ஆகி விட்டது. இன்று ஏக பட்ட புத்தங்கங்கள் வாங்கப்பட்டு இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது. தெரு வழியே போகும் போது புத்தக கடைகளை பார்க்கும் பொழுதும், புத்தகங்கள் பற்றிய விமர்சன கட்டுரைகள் படிக்கும் பொழுதும் ஒரு குற்ற உணர்வா அல்லது கழிவிரக்கமா என்று தெரியவில்லை ஏதோ வந்து தாக்குகிறது.

முன்பு நாங்கள் (நான், சரவணன், கண்ணன் ) சேர்ந்தால் புத்தகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் என்று பேசி கொண்டு இருப்போம். பெருவாரியான நேரங்களில் படித்த புத்தகங்களின் விமர்சன பகிர்வே பிரதானமாக இருக்கும். ஆனால் இன்று சந்தை நிலவரம், டார்கெட், என்று தான் உள்ளது.

நானும் சரவணனும் மிக கார சாரமாக பேசி கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் எங்களுக்கு சுவையான ஆம்லேட் போட்டு கொடுத்து இலக்கிய பணி ஆற்றுவான். அதே கடல் கரையில் என்றால் மிளகாய் பச்ஜி வாங்கி வருவான். எவ்வளவோ நாட்கள் விடிய விடிய பேசி விட்டு விடிந்த்து கடைக்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வந்து தூங்குவோம்.

நான் என்ன யோசித்து கொண்டு இருக்கிறேன்!!!!!

இப்பொழுதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கிளை கிளையாக பிரிந்து செல்லும் வண்டி பாதை போல ஏதாவது ஒரு சிந்தனை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. குதிரைக்கு கண் பட்டை கட்டி அதன் பார்வையை மறைப்பது போல மனத்திரை கட்டி எண்ண ஓட்டங்களை கட்ட வேண்டும் போல. அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

சூடிய பூ சூடற்க விரித்த வாக்கில் இருக்க என் மன பிசாசோ மரம் விட்டு மரம் தாவ போய் விட்டது ஒரு கூட்ஸ் வண்டியால்.

நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட்டதால் நாஞ்சில் நாடனை நாளை இரவு பார்த்து கொள்வோம் என்று ஏறி படுக்கையை விரித்து படுத்து விட்டேன். போர்வையை மேலே இழுத்து விட்டுகொள்ளும் போது ஒரு யோசனை, கூட்ஸ் வண்டி கார்டு வேலைக்கு போய் இருந்தால் இப்படி குளிர்பதன (A/C) பெட்டியில் போக முடியாதே என்று.

ஆமாம் கூட்ஸ் வண்டி கார்டு எப்படி தூங்குவார் ?

மன பிசாசே என்னை தூங்க விடு நீ பாட்டுக்கு மரம் விட்டு மரம் தாவ , நான் விடிய விடிய யோசித்து கொண்டு உட்கார மாதிரி வைத்து விடாதே!!!!!!!!!!!

நல்லிரவு.



04 March 2011

பார்த்தது - 16

சீடன்

நடிகர்கள்: கிருஷ்ணா (அறிமுகம்), அனன்யா (நாடோடிகள் புகழ் ), சுஹாசினி, விவேக், செம்மீன் ஷீலா, மீரா கிருஷ்ணன், இளவரசு, பொன்வண்ணன் and சிறப்பான தோற்றத்தில் தனுஷ்.

இசை: தீனா (50 வது படம்)

இயக்கம்: சுப்ரமணியம் சிவா.

தயாரிப்பு: மித் புரொடக்ஸன்ஸ் R. மோகன் .

கதை: ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் மஹா என்ற மகாலட்சுமி (அனன்யா). அவர் ஒரு தீவிரமான முருக பக்தை. (ஒரிஜினலில் கிருஷ்ண பக்தை என்று ஞாபகம்). அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு உருவம் வந்து மாலை சூடுகிறது.

இரண்டொரு நாட்களில் அந்த உருவம் அந்த குடும்பத்தின் பேரனாக உள்ளே வருகிறார்(கிருஷ்ணா). அவரும் மகாவை விரும்புகிறார். கிருஷ்ணாவின் தாயார் தங்கம் (சுஹாசினி) வேறு ஒரு பெண்ணை பார்த்து பையனுக்கு ஏற்பாடு செய்கிறார். குழப்பத்தில் தவிக்கும் மகாவிற்கு உதவி செய்ய மடப்பள்ளி சரவணன் (தனுஷ்) என்று அந்த பழனி மலை முருகனே வருகிறார். எந்த ஒரு கிராபிக்ஸ் கலக்களும் இல்லாமல் அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

தெளிந்த நீரோடை போல் கதை ஆரம்பத்தில் இருந்து போகிறது. ஆனால் கிருஷ்ணாவிற்கு எப்படி? ஏன் ? காதல் வந்தது என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏதோ மஹாவை காதலிக்கவே அவர் பழனி வந்தது போல் உள்ளது. நகைசுவை பகுதியை விவேக் பார்த்து கொள்கிறார். ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை.

பாடல்கள் சுமார் ரகம்.

அனன்யா படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார். நாடோடிகளில் கிடைத்த பெயரை இதில் தக்க வைத்து உள்ளார். தனுஷ் - ஒவ்வொரு படத்திலையும் அவருடைய performance அருமையாக அமைகிறது. ஆடுகளம் ஒரு தளத்தில் என்றால் மடப்பள்ளி சரவணன் வேறு தளத்தில் நிற்கிறார்.

"நந்தவனம்" அல்லது "நந்தனம்" என்று நினைவு. சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் மலையாளத்தில் நவ்யா நாயர் நடித்து பார்த்த ஞாபகம்.

கலியுக கண்ணன், உருவங்கள் மாறலாம் போன்ற "சமுக கதையில் பக்தி பரவசம்" என்ற பார்முலாவில் வந்துள்ள படம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்பதுதான் மிக பெரிய சந்தேகம். ஒரு இருபது வருடத்திற்கு முன்பு வந்து இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்க கூடிய படம்.

ஒரு ஆபாச கட்சி இல்லை. எங்கும் ஜடாமுடியுடன் வில்லனின் அடியாட்கள் சுமோ காரில் உருட்டு கட்டையை வீசி செல்லவில்லை. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை என்று பல நல்ல விஷயங்கள் நிறைந்த படம்.

எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனால் அதே போல் நிறைகளும் எதுவும் இல்லை. காதலர்கள் ஒன்று சேரும் போது நமக்கு சந்தோசமோ துக்கமோ எதுவும் ஏற்படவில்லை. காரணம் காட்சிகளை மிக அழுத்தமாக அமைக்காததுதான்.

சீடனுக்கு நல்ல குருநாதர் அமையவில்லை.

03 March 2011

படைத்தது -2

கடவுள் தரிசனமும் புது செருப்பும்.

ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறையும் முடிந்த அளவு நெல்லை அப்பரை போய் பார்த்து விட்டு வருவதை ஒரு பழக்கமாக வைத்து உள்ளேன்.

அது பக்தி காரணமாகவா என்றால் எனக்கு சொல்ல தெரியவில்லை. நானும் பல ஊர்களுக்கு என் வேலையின் நிமித்தமாக போய் வந்தாலும் எந்த ஊரிலும் கோவில்களை தேடி போவதில்லை. இன்னும் சொல்ல போனால் என்னை போல் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் காலை நேரங்களில் கண்டிப்பாக அந்த ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கும், மாலையில் அருமையான bar யை தேடி செல்வது வழக்கம்.

ஆனால் நெல்லை போனால் மட்டும் எப்படியாவது கோவிலுக்கு போய் விடுவேன். ஒவ்வொரு முறையும் அதன் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்து கொண்டே உள்ளது. ஒரு கட்டுமான பொறியாளாரா (Civil Engineer) நான் வியக்கும் விஷயம். பொதுவாக எல்லோரும் சொல்வார்கள் " எந்தவொரு தொழில் நுட்ப அறிவும் இல்லாமல் எப்படி கட்டினார்கள்" என்று.

என்னை பொறுத்த வரையில் நமது தமிழர்கள் கட்டிட கலையில் மிக பெரிய திறமையுடன் இருந்து உள்ளார்கள். ஆனால் அதனை ஆவண படுத்தவோ அல்லது அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கவோ இல்லை. நாம் மேற்கு நாட்டவரிடம் கடன் வாங்கிய அறிவை கொண்டு பொழப்பை நடத்தி வருகிறோம்.

இன்றைக்கு எல்லா மருத்துவர்களும் சொல்வது நடை பயிற்சிதான். நெல்லைஅப்பர் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தாலே போதும் வேறு எந்த பயிற்சியும் தேவை இல்லை. அங்கு நிலவும் ஒரு அமைதி போதும் மன அழுத்தத்தை குறைக்க. So BP மாத்திரைகளையும் தூக்கி போட்டு விடலாம்.

எவ்வளோவோ நல்ல விசயங்களை நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்று இருக்கிறார்கள், ஆனால் நாமோ நமது கலாச்சாரத்தை மறந்து விட்டு அலைந்து கொண்டு உள்ளோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில நிம்மதியை தேடி அலைகின்றாய் என்றும் சொல்லி உள்ளார்கள்.

இப்பொழுது நான் கோவிலுக்கு போன கதைக்கு வருவோம். எப்பொழுது கோவிலுக்கு போனாலும் செருப்பை பத்திரமாக "காலணி பாதுகாக்குமிடம்" என்று பலகை தொங்குமிடத்தில் பத்திரமாக வைத்து விட்டு தான் போவேன். இந்த முறையும் அவ்வாறு விட போனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லை. முன்பு செருப்பு வைத்து பாதுகாக்க காசு கொடுக்க வேண்டும், அதனால் ஆட்கள் எப்பொழுதும் இருப்பார்கள். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது அதனை இலவசமாக பாதுகாக்க வேண்டும் என்று மாற்றி விட்டார். அதனால் யாரும் பொறுப்பாக இருப்பது கிடையாது.

இப்பொழுது நான் கோவிலுக்கு போவதா அல்லது பாதுகாக்கும் ஆள் வரும் வரை காத்திருப்பதா??? பெரும் குழப்பமாகி விட்டது. பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார், அவர் "சும்மா விட்டுட்டு போங்க சார் யார் எடுக்க போகிறார்கள்" என்று சொன்னார். யதார்தமாக அவர் காலை பார்த்தால் செருப்பு ஏதும் அணிந்திருக்கவில்லை. வடிவேலு பாணியில் நம்ம செருப்பை ஆட்டையை போட ஐடியா பண்றானோ ஒரு குரல் வேறு கேட்டது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை, நாம கோவிலுக்குள் போவோம் என்று செருப்பை விட்டு விட்டு சன்னிதானத்தை நோக்கி சென்றேன். போகும் வழியில் எப்பொழுதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

தீபாரதனை காட்டும் பொழுது
வாசலில்
விட்ட செருப்பு

யார் எழுதியது என்பது மறந்து விட்டது ஆனால் கவிதை மட்டும் மறக்கவில்லை. சரியாக ஈசனுக்கு தீபாராதனை காட்டும் பொழுது மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.

தமிழ் சினிமா போல கடைசியில் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றது போல அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். எல்லோரும் இறைவன் காலடியில் தங்கள் எண்ணத்தை சமர்ப்பிக்க நான் மட்டும் எனது செருப்பிடம் சமர்ப்பித்து விட்டு நின்று கொண்டு இருந்தேன்.

பிரகாரம் சுற்றும் பொழுதும், தாயார் சன்னதியில் அபிசேக அலங்காரம் பார்க்கும் பொழுதும் மீண்டும் மீண்டும் அதே கவிதை. குணாவில் கமல் சொல்வது போல் "கவித, கவித".

செருப்பு தொலைந்து போனால் நல்லது தரித்திரம் போய் விடும் என்று எப்போலுதோ எங்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படி செருப்பு தொலைந்து எனது கடன் எல்லாத்தையும் (ஏ அப்பா எவ்வளவு பேராசை) நெல்லை அப்பர் தீர்த்து விடுவது போலவும் ஒரு நினைப்பு (நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்பது சரிதான்)

இது போல் எந்த அதிசியமும் நடக்காமல் எனது செருப்பு விட்ட இடத்தில மிக பத்திரமாக இருந்தது. அதை விட அங்கு நின்று கொண்டு இருந்த செருப்பில்லாத மனிதர் " என்ன சார் திருப்தியா தரிசனம் பார்த்திங்களா? மஹா சிவராத்திரி இல்லையா அதனாலே ஈஸ்வர தரிசனம் ரொம்ப நல்லது" என்றார்.

ஓம் நமசிவாய

23 February 2011

பார்த்தது - 15

நடுநிசி நாய்கள்

நடிகர்கள்: வீரா, சமீரா ரெட்டி, சமந்தா மற்றும் நான்கு நாய்கள்.
ஒளிபதிவு : மனோஜ் பரமஹம்ஷா
எடிட்டிங்: ஆண்டனி
கதை, திரைகதை, வசனம், இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன்.

6.30 க்கு ஆரம்பித்து 8.30 க்கு படம் முடிந்து விட்டது. ரொம்ப சந்தோஷமான விஷயம். பலவீனமானவர்களுக்கு இல்லை என்று படத்தின் விளம்பரம் சொல்லுகிறது.
உண்மைதான் திருச்சி கலைஅரங்கம் திரைஅரங்கில் 90 ரூபாய் பணத்தையும் கொடுத்து A/C இல்லாமல் புழுங்கி உட்கார்ந்து இருக்கும் போது ஒரு விளங்காத படம் பார்க்கவேண்டி இருந்தால் பலவீனமானவர்கள் இறந்து போகவும் வாயப்பு உண்டு.
கெளதம் உங்களால் இவ்வளவு மோசமாகவும் படம் எடுக்க தெரியுமா?

19 February 2011

படைத்தது -1

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது !!!!????

பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என்று சொல்வார்கள். அப்படியான புதனில் நமது பிரதமர் அவர்கள் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறார் என்றதும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உட்காரும் போதே எனது மனைவி சொன்னார். "வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லையா என்று? மனைவி சொல்லே மந்திரம் என்பது நமக்கு எப்போதும் உடனே உரைக்காது என்பது பல விசயங்களில் நிரூபணம் ஆனது போல இதிலும் ஆனது.

மொத்த பேட்டியிலும் எங்காவது ஒரு இடத்திலாவது தலை நிமிர்ந்து பேசுவது போல் பேசுவாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். மொத்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நமக்கே ஒருவிதமான ஆயாசமும் அலுப்பும்தான் மிஞ்சியது.

ஒரு இயலாத மனிதரின் புலம்பலாகவே இருந்தது. பலிஆடுகளை தேடியும், தன் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்ல உப்பு சப்பில்லாத காரணங்களை அடுக்கியும் கூட்டத்தை நிறைவு செய்தால் போதும் என்ற அளவிலேயே நடந்தது. உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் தனது அமைச்சர்களை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்று பொலம்புவதை கேட்கும்போது நமது நிலைமையே தேவலாமோ என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில எனக்கு ஒரு சந்தேகம் - Suppose ஒரு கூட்டணி கட்சி ஒரு தீவிரவாதியை தனது கட்சி சார்பான அமைச்சர் என்று சொன்னால் அதற்கும் ஒப்புக்கொள்வாரா நமது பிரதமர்????

ஒரு அமைச்சரவையை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்றால் அவர் சொல்லகூடிய "இன்னும் நெறைய வேலைகள் இருக்கு நான் முடிக்க அதனால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்பதற்கு என்ன அர்த்தம். இவர் சொல்வதை கேட்காதவர்களை வைத்துகொண்டு இன்னும் என்ன வேலையை செய்ய போகிறார்????

இத்தனைக்கும் எல்லா நிருபர்களும் மிகவும் தன்மையாகவே கேள்விகள் கேட்டார்களே ஒழிய , யாரும் எப்படியாவது இந்த கலந்து உரையாடலின் முடிவில் பிரதமரை சிக்கலில் ஆழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி கேட்டதுபோல் இல்லை.

இதை எல்லாம் விட கொடுமை "தேவாஸ்" பற்றிய விளக்கம். ஸ்பெக்ட்ரம் தான் அவரது இலாகா இல்லை, ஆனால் இஸ்ரோ அவரது நேரடி கண்காணிப்பில் தானே வருகிறது. அது சம்பந்தபட்ட கேள்விகளுக்கு கூட யாரோ எழுதி கொடுத்ததை தான் படித்தார்.

ஏழைகளுக்கு கொடுக்கும் மான்யங்கள் கூட 2G யையும் ஒப்பிட்டு, பிரதமர் (அதுவும் ஒரு பொருளாதார புலி என்று உலக தலைவர்களால் பாராடப்பட்ட ஒருவர்) பேசியது அபத்தத்தின் உச்சம். இதில் எந்த ஏழை பலன் அடைந்து இருக்கிறார்??? ஒருவேளை உலக பணக்காரர் வரிசையில் "கடைசியாக" இருக்கும் ஏழைகள் பலன் அடைந்தது பற்றி இருக்குமோ!!!!!

இந்தியா ஊழல் மலிந்த நாடு என்று ஊடகங்கள் சொல்வது போல இல்லை என்று சொன்னதுதான் இந்த வருடத்தின் மிக பெரிய நகைச்சுவை. அனேகமாக இதே போல் தொடர்ந்தால் நாம் 2020 ல் வல்லரசு ஆவோம் என்று அப்துல் கலாம் சொன்னது நடக்காது...... ஆனால் உலகிலேயே அதிக ஊழல்கள் செய்யப்பட்டது திருமிகு. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியிலேதான் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய அளவில் ஆகி விடும் என்பது மட்டும் உறுதி.

சரித்திரம் தன்னை எப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை திருமிகு. மன்மோகன் சிங் தீர்மானிக்க வேண்டிய நேரமிது.

13 February 2011

பார்த்தது - 14

தம்பிகோட்டை

நடிகர்கள்: நரேன், பூனம் பஜ்வா, மீனா, சந்தானம், சங்கீதா, கஞ்சா கருப்பு மற்றும் இளையதிலகம் பிரபு.
இசை: D. இமான்
பாடல்கள்: விவேகா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: R. அம்மு சுரேஷ்
தயாரிப்பு: ராஜேஸ்வரி பிலிம்ஸ் - R.K. சுரேஷ்.

கதை: சென்னையில் வசிக்கும் அன்பான அக்கா பிரியா (மீனா) தம்பி அழகிரி (நரேன்). கல்லூரியில் ஆசிரியர் ஆக பிரியா வேலை பார்க்கிறார், அவரது தம்பி உடற்கல்வி கல்லூரியில் படிக்கிறார். பிரியாவிற்கு தம்பி பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. காரணம் ஒரு பிளாஷ் பேக்.

தம்பிகோட்டை என்ற ஊரில் அன்பானா அப்பாவாகவும், ஒரு நல்ல கணவராகவும், நல்ல மனிதனாகவும் வாழ்ந்து வருகிறார் சண்முகம் (பிரபு). அவர் வேலை பார்க்கும் அமிர்தலிங்கம் பஸ் கம்பெனியின் முதலாளி (நான் கடவுள் ராஜேந்திரன்) ஒரு தாதா போல் இருக்கிறார். பேருந்துகளை சரியான முறையில் பராமரிக்காமல் விபத்துகள் நடக்கிறது. அதனை தட்டி கேட்ட பிரபுவை அவர் கொலை செய்து விடுகிறார்.

NSS கேம்பிற்கு தம்பிகோட்டை வரும் நரேன் இது எதுவும் தெரியாமல் அவர் மகள் கனகாவை (பூனம் பஜ்வா) காதலிக்கிறார். பின்பு வழக்கம் போல சுபம்தான்.

தமிழ் சினிமாவிற்கு உண்டான அனைத்து இலக்கண, இலக்கியங்களை மீறாத ஒரு படம். தமிழ் ஆசிரியர் என்பவர் குடுமியுடன்தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. இந்த காலத்தில் புரோகிதம் செய்யும்
பிராமணர்கள் கூட குடுமி வைத்து கொள்வது கிடையாது. ஆசிரியரை எதிர்த்து பேசும் மாணவர்கள், எவ்வளவு பிரச்சினைகள் நடந்தாலும் எட்டி பார்க்காத போலீஸ் என்று அத்தனையும் இதில் இருக்கிறது. இயகுனர்க்கு இப்படி ஒரு கற்பனை பஞ்சம் வந்திருக்க தேவை இல்லை.

"அஞ்சாதே" படத்திற்கு பிறகு நரேன் காத்திருந்து ஒப்புக்கொண்ட படம். இன்னும் கொஞ்சம் நல்ல படமாக தேர்வு செய்து இருக்கலாம். ஒரு நல்ல நடிகர் தன்னை வீணாக்கி கொள்ள கூடாது.

பிரபு, கஞ்சா கருப்பு, நான் கடவுள் ராஜேந்திரன், என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்து இருக்கிறார்கள். இதில் மீனாதான் ரொம்ப fresh ஆக இருக்கிறார். lady don ஆக வரும் சங்கீதா மிக நன்றாக செய்து இருக்கிறார். அப்படி யாரும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை ஆனால் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் இருக்கும் காட்சிகளில் பிரமாதம் என்று சொல்லகூடிய அளவிற்கு நடித்து உள்ளார். "மன்மதன் அன்புவிற்கு" பிறகு இதுவும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும். ஆனால் விளங்காத ஒரு படத்திற்கு இவ்வளவு சிரமம் எடுத்து நடித்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி?

சந்தானம், M.S. பாஸ்கர் கூட்டணி நகைசுவைக்கான பொறுப்பை எடுத்து கொண்டு உள்ளது. சந்தானம் - பழைய கவுண்டமணி styleயை அப்படியே காப்பி அடித்து இருக்கிறார்.

மொத்தத்தில் தம்பிகோட்டை - தகர கோட்டை

பார்த்தது -13

தி மெக்கானிக் (The Mechanic)

நடிகர்கள்: சாசன் சேத்தம் (Jason Statham) , பென் பாஸ்டர் (Ben Foster) மற்றும் பலர்.
இயக்கம்: சைமன் வெஸ்ட் (Simon West)

Con Air, Tomb Raider போன்ற படங்களின் இயக்குனரும், Transporter புகழ் கதாநாயகனும் சேர்ந்து உருவாக்கிய படம்.

ஆர்தர் பிஷப் (Jason Statham) ஒரு தொழில் முறை கொலைகாரன். எந்த ஒரு தடயம் இல்லாமல் கொலை செய்வதிலும், கொலைகள் இயற்கை மரணம் அல்லது விபத்து என்று உருவாக்குவதிலும் மிக திறமை ஆனவன். The Italian Job புகழ் டேவிட் சோதெர்லாந்து (David Sutherland) தான் ஆர்தரின் குரு ஹாரி. இவர்களின் தலைவன் டீன் (Tony Goldwyn). நன்றாக போய் aகொண்டிருந்த வாழ்கையில் ஆர்தருக்கு ஒரு பிரச்னை. அவரது குரு ஹாரியையே கொல்ல வேண்டிய நிர்பந்தம்.

அதன் பிறகு ஹாரியின் பையன் ஸ்டிவ் (Ben Foster) வந்து சேருகிறான். அவனுக்கு தன் தந்தையை கொன்றது ஆர்தர்தான் என்று தெரிய வருகிறது. அதன் பின்பு நடக்கும் பிரச்சனைகளும், இறுதியாக எல்லோரையும் கொன்றுவிட்டு ஆர்தர் மட்டும் தப்பித்து செல்வதுபோல் படம் முடிகிறது.

அதே இறுகிய முக தோற்றத்துடன் Jason. Ben Foster (X Men புகழ்) வந்த பிறகு கதை கொஞ்சம் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் மாறுகிறது. மொத்தமாக பார்த்தால் பரவாயில்லை என்றுதான் சொல்ல
முடியுமே தவிர சூப்பர் என்று சொல்ல முடியாது.

Followers