31 December 2011

நினைவுகள் -3

நானும் அப்பாவும்

என் அப்பா இறந்தது 2011 ஜனவரி மாதம் 9 ம் தேதி. அவரது நினைவு நாள் 29 ம் தேதி வந்தது. நான் தினமும் ஒரு தலைப்பில் அப்பாவும் - அவருடன் சம்மந்தம் உள்ளவர்கள் என்ற தலைப்பில் அதாவது அப்பாவும் அம்மாவும், அப்பாவும் தம்பியும் என்று எழுதுவதாக இருந்தேன்.

ஆனால் ஜெயமோகன், சாரு நிவேதிதா எழுத்துகளுக்கு வரும் எதிர்ப்பு போல் வந்ததால், அதுவும் சொன்னவர் என்னை விட என் அப்பா மேல் ப்ரியம் கொண்டவர் என்பதால் எனக்கும் அவருக்குமான உலகத்தை பற்றி மட்டும் எழுதலாம் என்று எண்ணி உள்ளேன்.

************************************************************************************

என் அப்பாவை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு எப்பொழுதும் உடனே நினைவில் வருவது, எனக்கும் அவருக்குமான பேருந்து நிலைய சம்பவம்.

மரத்தின் வேர்கள் ஆழ பதிந்து மண்ணுக்குள் போய்விட்டாலும் அதன் இருப்பை பூத்து குலுங்கும் மலர்கள், கனிகள் மூலம் காட்டுவதை போல் என் மனதின் ஆழத்தில் புதைந்து விட்ட நினைவுகளில் ஒன்று.

நான் கல்லூரியில் சேர்ந்த வருடம். அப்பொழுது நாங்கள் புதியதாக வீடு ஒன்று கட்டிஇருந்தோம். ஒரு மத்தியதர வர்கத்திற்கு உண்டான பொருளாதார சிக்கல்கள். அதிலும் என் அம்மாவிற்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்று ஒரு கொள்கை. அந்த வருமானம் வேறு இல்லாத நிலைமை. அதன் காரணமாக மொத்த வீட்டிலும் நாங்களே குடி இருந்தோம்.

நானும் என் தம்பியும் எங்கள் அளவிற்கு மொசைக் அது இது என்று எங்கள் ஆசைகளை சொல்லி செலவை இழுத்து விட்டும் இருந்தோம். வங்கி கடன், அம்மாவின் நகை, இன்னும் கைமாத்து, கால்மாத்து என்று வாங்கி அதிக பாரம் ஏற்றிய வண்டியை இழுக்கும் மாடு போல் அப்பா பெருமூச்சு விட்டு கொண்டு இருந்த நேரம்.

தீபாவளிக்கு நான் விடுமுறைக்கு வந்து இருந்தேன். எப்பொழுதும் போல் சினிமா, கூத்து என்று தீபாவளி கழிந்தாலும், வறுமையின் நிறத்தை காட்டி கொண்டு இருந்தது. அப்பொழுது ராஞ்சியில் இருந்து ஒரு சப்ளையர் வந்து இருந்தார். நடு வீட்டில் உட்கார்ந்து 20,000 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தார். அன்று எங்கள் வெளி கடனும் அவ்வளவே.

வந்தவருக்கு நல்ல விருந்து, உபசாரம் எல்லாம் முடிந்தது. எனக்கு மனதுக்குள் ஒரு சந்தோசம். பணம் வர போகிறது. அப்பா நிறைய துணி எல்லாம் எடுத்து தருவார். ஏதோ தீபாவளி முடிஞ்சாவது நமக்கு பம்பர்தான் என்று வந்தவர்க்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தேன்.

எல்லாம் முடிந்து கிளம்பும் பொழுது அவரிடமே பணத்தை கொடுத்து "நீங்கள் வேலையை சரியாக முடியுங்கள் நான் கையெழுத்து போட்டு தாரேன் எனக்கு தேவையான வருமானம் எனக்கு வருது. அடிக்கடி நண்பராக எங்கள் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அவர் சென்ற பின் நான் என் அப்பாவுடன் சண்டை போட்டேன். கோன் ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று நினைத்த நேரத்தில் கையில் இருந்த குச்சி ஐசும் பறிக்கப்பட்ட குழந்தை போல் மனது துடித்து விட்டது. இன்றைக்கு போல் அன்று மனம் பக்குவப்படவில்லை. அனுபவங்கள்தானே வாழ்கையில் அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் அனுபவங்கள் கிடைத்து ஒரு மனிதனின் மனம் பக்குவபடும் போது வாழ்கையே முடிந்து விடுகிறது.

"லஞ்சமாக வரும் பணம் குடும்பத்தின் அமைதியை குலைத்து விடும். என் உழைப்பில் வராத பணத்தில் நான் குடும்பத்திற்கு எதுவும் செய்ய மாட்டேன்" என்று அப்பாவும், "அப்பாதான் அவ்வளவு சொல்றாரே, ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே" என்று அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் ஏர் ஓடாத நிலம் போல் இருந்த மனதில் எதுவும் ஏறவில்லை.

இரண்டு நாட்கள் வீட்டில் யாருடனும் சரியாக பேசவில்லை. என்னுடைய செயலால் எல்லோரும் இறுக்கமாகவே இருந்தார்கள். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு கிளம்பி போகும் பொழுது, என்னை பேருந்தில் ஏற்றி விட அப்பாவும் பேருந்து நிலையம் வந்தார்கள்.

உள்ளே நுழைந்து பேருந்தில் ஏற போகும் நேரத்தில் என் செருப்பின் வார் அறுந்து விட்டது. பக்கத்தில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. மனது உள்ளே இருந்த இறுக்கம் மனதின் வழியே வழிந்து கண்ணின் ஓரத்தில் கரை கட்டி நிற்கிறது. அந்த பணம் இருந்தால் இப்போ BATA விலே போய் வாங்கி இருக்கலாமே என்று மனது புலம்புகிறது.

ஒரே பார்வை என் அப்பாவை பார்த்தேன். அவர் எதுவும் பேசாமல் அவர் செருப்பை கழட்டி என்னை போட்டு கொள்ள சொல்லி விட்டு கையில் வைத்து இருந்த மாலை முரசு செய்தி தாளில் நான் கழட்டி போட்ட செருப்பை கையில் எடுத்து கொண்டு வெறும் காலில் நின்றார்.

அந்த செருப்பு எதுக்குப்பா? என்று கேட்டேன்.

வெளியிலே செருப்பு தைக்கறவன் இருப்பான், நான் தைத்து போட்டு கொள்கிறேன் என்று சொன்னார்.

எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர் அந்த மாதிரி எல்லாம் போட கூடியவர் அல்ல. மிகவும் stylish ஆக இருக்க கூடியவர்.

பரவாயில்லை அப்பா நான் அப்படியே அட்ஜஸ்ட் செய்து போட்டுகிட்டு காலேஜிக்கு போறேன், அங்கே போய் தைத்து கொள்றேன் என்று சொன்னேன்.

இல்லப்பா, எனக்கு செருப்பை தைத்து போட்டுகிறது பெரிய பிரச்சனை இல்லப்பா, ஆனால் என் பிள்ளைக்கு என் கொள்கையை புரிய வைக்க முடியவில்லை என்பது தான் எனக்கு வருத்தம். நான் எடுத்த முடிவு சரி என்கிறதை நீ ஒரு நாள் புரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

பேருந்து கிளம்ப ஹாரன் ஒலித்தது, ஓடி சென்று ஏறி கொண்டு என் இருக்கையில் அமர்ந்து அப்பாவை பார்த்தேன், அதே சிரித்த, கவலையே தெரியாத முகம். எப்போதும் போல் பேருந்து வேகம் எடுக்கும் வரையில் கூட நடந்து வருகிறார். கக்கத்தில் மாலை முரசு பேப்பருக்கு உள்ளே என் செருப்பு.

மாலை நேர வெயில் அவர் முகத்தில் பட கண்ணை இடுக்கி கொண்டு பேருந்து திரும்புவதை பார்த்து கொண்டு இருக்கிறார். எனக்கு தான் அவரது உருவம் மங்கலாக தெரிந்தது. இப்பொழுதும் என் கண்ணின் ஓரத்தில் நீர் இருந்தது ஆனால் அது எனக்கு வேண்டியது கிடைக்காதால் அல்ல, என் அப்பாவின் பிரியத்தால்.

பூக்கடையை விட்டு வந்தபின்பும் அந்த வாசம் நம் கூட வருவது போல் அப்பாவின் வார்த்தைகளும், அவரது ஏக்கம் நிறைந்த பார்வையும் என் கூடவே வந்தது.

லஞ்சம் வாங்குவது பாவம் என்பதை நான் உணர்ந்து விட்டேன் என்பதை தான் நான் அவரிடம் கடைசி வரையில் சொல்லவில்லை. சொல்லித்தான் என்னை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் என்றுமே இருந்தது இல்லை. எல்லாவற்றையும் சொல்லி விட்டால் அப்புறம் வாழ்கையில் ஏது சுவாரசியம்.







30 December 2011

நினைவுகள் -2

அப்பாவும் அம்மாவும்





எனக்கு தெரிய ஒருவருக்கு பிடிக்காததை இன்னொருவர் செய்ததே இல்லை. ஆனால் வெளியில் பார்க்கும் பொழுது அப்படி தெரியாது.



வருடத்திற்கு ஒரு சுற்றுலா, மூன்று மாதத்திற்கு ஒரு முறை சினிமாவும், ஓட்டலும், அப்போதைய fashion ல் புடவை, நகைகள் என்று என் அம்மாவிற்கு எந்த குறையும் வைக்காதவர்.

அவருக்கு சக்கரையும் உப்பும் குறைக்க வேண்டும் என்ற பின்பு அதே பத்திய சாப்பாட்டை இன்று வரையில் எந்த வியாதியும் இல்லாமல் சாப்பிடும் அம்மா.

இதை என்ன என்று சொல்வது.



என் அப்பா இறப்பதற்கு ஒரு 15 நாட்கள் முன்பு ஏதோ பேசி கொண்டு இருந்த பொழுது சொன்னார். " உங்க அம்மா இல்லைனா, இந்த குடும்பத்தை இவ்வளவு தூரம் வளர்த்து இருக்க முடியாது. அது எதையும் அனுபவிக்கவே இல்லை. இந்த ஏப்ரல் மாசம் பரீட்சை முடிந்தவுடன் நான், உங்க அம்மா, பிள்ளைங்க மட்டும் எங்கயாவது போய்ட்டு வர போறம், அதுக்கும் ஒரு சந்தோசமா இருக்கும் இல்லை" என்றார்.

ஏப்ரல் வந்து போய் விட்டது............

குறிப்பு: என் நண்பன் சரவணனுக்கு நான் இப்படி எழுதியது பிடிக்கவில்லை என்ற காரணத்தால், அவனுக்கு ஆட்சேபம் என்று பட்ட பகுதிகளை நீக்கியபின் கட்டுரை.









29 December 2011

நினைவுகள் -1

அன்புள்ள அப்பா




சட்டமிட்ட
படத்திற்கு ஒரு மாலை
பாட்டன்
முப்பாட்டன்
பெயர் சொல்லி
பிண்டம் வைத்து
படையல் போட்டு
அப்பா
உங்கள் நினைவு நாள்
நிறைந்து விட்டது.
******
அவ்வளவு தானா அப்பா!!!!!
அழகாய் மடித்து
சட்டை பைக்குள்
வைக்கப்பட்ட
கைக்குட்டையை
போல்
மனதின்
உணர்வின்
ஆழத்தில் நீங்கள்.......
*************
நல்ல புத்தகம்,
நல்ல இசை,
காலை செய்தித்தாள்
என உங்கள் நினைவுகள்,
கைதேர்ந்த
ஒரு மந்திரவாதியின்
தொப்பியின்
உள்ளே இருந்து
வெளி வரும்
பூக்களை போல்
முயலை போல்
வந்து கொண்டே உள்ளது.
************
மறந்தால் தானே
நினைவு நாள்?
***************
எப்படி இருக்கிறீர்கள் அப்பா.






27 December 2011

முடிவின் ஆரம்பம்




முடிவின் ஆரம்பம்


கொட்டும் அருவியாய்
உன்
நினைவு துளிகள்
என் மனவெளியில்.

மனவெளியில் இருள்
சூழும் பொழுது
என் உணர்வு விட்டு
வேறு உலகம் புக
நீ
தெரிகிறாய்
ஒற்றை வெள்ளியாய்
வானத்தில்.

வானத்தில்
அலையும் மேகங்கள்
விளையாடும் விண்மீன்கள்
உன்னை
தேடி தவிக்கும்
நான்.

நான் தேடுவது
உன்னையா
என்
நம்பிக்கையையா?

நம்பிக்கையும்
நீயும்
ஒன்றாய்
தெரிய
பிரகாசமாய்
என் மனவெளி.

மனவெளி எங்கும்
மீண்டும்
உன்
நினைவுகள்
கொட்டும் அருவியாய்


23 December 2011

மௌனகுரு - திரைவிமர்சனம்

பார்த்தது - 19

மௌன குரு

நடிகர்கள்: அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ்கான் .
இசை: தமன்
ஒளிபதிவு: மகேஷ் முத்துசாமி
தயாரிப்பு: மோகனா மூவீஸ்
பார்த்தது: முத்துராம் - திருநெல்வேலி (10 பேர் மட்டுமே இரவு காட்சியில்)

சமீபத்தில் வந்த ஒரு நல்ல த்ரில்லர் வகை படம் என்று சொல்லலாம். நல்ல திரைகதை, தப்பான நேரத்தில் மோசமான குத்து பாடல் இல்லாதது, காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ற ஒளிபதிவு. விறுவிறுப்பான பட தொகுப்பு. பன்ச் வசனங்களோ பேசாத ஹீரோ என்று படத்தில் சொல்ல தகுந்த விஷயங்கள் நிறைய உள்ளது.

ஒரு சமூகத்துடன் சமரசம் செய்ய முடியாமலும், செய்ய வேண்டிய நிர்பந்தத்திலும் உள்ள ஒரு இளைஞனின் உணர்வுகளை மிக சிறப்பாக அருள்நிதி வெளி கொண்டு வந்து உள்ளார்.

உதயன் பார்த்தவுடன் இன்னும் ஒரு புரட்சி அல்லது எழுச்சி புயல் உருவாகி விட்டதோ என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் தான் இன்னும் ஒரு கதை நாயகனாகவே இருக்க விரும்புவதை சொல்லாமல் சொல்லி விட்டார். கதைக்கு நாயகன் தேடும் இயக்குனர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

ஒரு கடத்தல் மற்றும் கொலை விசயத்தில் சம்மந்தமே இல்லாமல் அருள்நிதி மாட்டி கொள்கிறார். அதில் சம்மந்த பட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை மன நிலை பாதிக்க பட்டவர் என்று சொல்லி மன நல காப்பகத்தில் அடைத்து விடுகிறார்கள். (போராளி கதை போலவே) அதில் இருந்து தப்பி தன்னை நிருபித்து கொள்வது தான் கதை.

நடிகர்கள் தேர்வு மிக அருமை. வடிவேலுவை அட்ரஸ் கேட்டு அலற வைத்த கிருஷ்ணமூர்த்தி, ஜான் விஜய், செல்வம் மற்றும் ராஜேந்திரன் என்ற பெயரில் வரும் இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து எல்லா கெட்ட காரியங்களையும் செய்கிறார்கள். வில்லன் வேசத்திற்கு மிக அருமையான ஆட்கள்.

அதே போல மன நிலை காப்பகத்தில் இருந்து அருள்நிதி உடன் தப்பித்து வரும் நபர் மிக அருமையாக நடித்து உள்ளார்.

நல்ல போலீஸ் பழனி அம்மாளாக வரும் உமா ரியாஸ் மிக அருமை. ஆர்ப்பாட்டம் இல்லாத அதே நேரம் ஒரு யதார்த்தமான பெண் போலிசை அடையாள படுத்தி உள்ளார். இத்தனை காலம் ஒரு திறமையான நடிகையை தமிழ் திரை உலகம் பயன் படுத்தி கொள்ளவில்லை. உமா ரியாசின் அம்மா கமலாவை கடைசி வரையில் அழ வைத்தே பார்த்து சலித்து போனது போல் இல்லாமல் இவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையட்டும்.

சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் ஒரு நல்ல படம்.

மௌன குரு - உரக்க பேசுகிறான்.

16 December 2011

ஒஸ்தி - திரை விமர்சனம்

பார்த்தது - 18

ஒஸ்தி

நடிகர்கள்: STR என்கிற சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி, நாசர்.

இசை: தமன்

இயக்கம்: தரணி

பார்த்தது : வரதராஜா- சிட்லபாக்கம் - சென்னை


ஒரு குப்பை படத்தை மீண்டும் ரொம்ப குப்பையாக எடுத்து இருக்கிறார்கள். சிம்பு police உடையில் வருவதை பார்த்தால், நாம் வீட்டில் குழந்தைகளுக்கு டாக்டர், ராணுவ வீரன் போன்று மாறு வேட போட்டிக்கு தயார் செய்வது போல் இருக்கிறது.

ஹிந்தி மிகவும் பிரபலமான பாடல் முன்னி - அதனை மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஆட வைத்து உள்ளார்கள். ஹிந்தி மொழி புரியாவிட்டாலும் நடனம் அருமையா இருந்தது, இதில் சுத்த வேஸ்ட். அந்த பாடலுக்கு L.R. ஈஸ்வரியை பாட வைத்து உள்ளார்கள். படம் முடிந்து வெளியில் வந்த பொழுது டீ கடையில் " பட்டத்து ராணியில் " கிறக்கமாய் இழுத்து கொண்டு இருந்தார். கல்லசா என்று கோரஸ் பாடுபவர்கள் குரலில் இருந்த கிக் கூட LRE இடம் இல்லை. அவரை சொல்லி எந்த குறையும் இல்லை. அவர் வயது!!!!! அதில் மிக கொடுமையானது TR இன் குரல் தான்.

ரிச்சா - மயக்கம் என்ன படத்தில் கொடுத்த performance க்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ரோல். ரிச்சா இது மாதிரி படங்களில் நடிப்பதை தவிர்த்தால் ஒரு ரவுண்டு வரலாம். இல்லையேல் அவரது பெயரை போலவே கங்கை கரையில் பாடம் சொல்லி கொடுக்க போக வேண்டியது தான்.

தில், தூள், கில்லி பட இயக்குனரின் வெற்றி படைப்பு என்று விளம்பரம் கொடுத்தவர்கள் குருவி படத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. அதற்கு சமமான ஒரு படம். தரணி சார் என்ன ஆச்சு?

பாடல்கள் சுமார். சந்தானம் காமெடி நன்றாக உள்ளது.

நல்ல A/c யும், ஒரு பிரமாண்டமான லுக்கும் உள்ள ஸ்க்ரீனில் பார்த்தது மட்டுமே இந்த படம் பார்த்ததில் உள்ள ஒரு நல்ல அனுபவம்.

ஒஸ்தி - நாஸ்தி

06 December 2011

படைத்தது -6

எனக்கொரு தீவு வேண்டும்

உன்னிலிருந்து தூரமாய்
என்னிலிருந்து தூரமாய்
கடலுக்கு அப்பால்
காற்றுக்கு அப்பால்
மலையை தாண்டி
எனக்கொரு தீவு வேண்டும்

கர்வத்தை தணித்து
மன ஓலத்தை தணித்து
என்னில் இருக்கும்
உன்னை தேடி...
உன்னை மட்டும் தேடி
உணர
எனக்கொரு தீவு வேண்டும்.

உன்னை உணர்ந்து
என் மனவெளி எங்கும்
உன் அன்பை உணர்ந்து
எனக்கான காதலை
நீ உணர்ந்து
நான் வாழ
எனக்கொரு தீவு வேண்டும்.

அது வரையிலும்
நீயும் நானும்
ஒரே கூரையில்
தீவாய் வாழ்வோம்.

Followers