10 April 2020

பார்த்தது: பயர் பிராண்ட் (FIRE BRAND )



பார்த்தது: பயர் பிராண்ட் (FIRE BRAND )
மொழி: மராத்தி 
நடிகர்கள்: கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர், உஷா ஜாதவ் 
இயக்கம் அருணா ராஜே 
தயாரிப்பு: பிரியங்கா சோப்ரா (நடிகை)

கதை சுருக்கம்: நீதி மன்றத்தில் புலியாக இருக்கும் ஒரு பெண், தனது இளம் வயதில் ஏற்பட்ட பாலியல் பலாத்காரத்தினால் உருவாகும் மன உளைச்சலை வெல்ல போராடுவதே கதை.

மாதவ் மற்றும் சுனந்தா - இனிமையான இல்லறம் நடத்தும் தம்பதிகள். ஆனால் கணவருடன் இணையும் பொழுது சுனந்தாவிற்கு இளமையில் நடந்த பாலியல் வன்புணர்வு நினைவுக்கு வந்து இனிமை கலைகிறது. இந்த பக்கம் மிக சிக்கலானா வழக்குகளையும் மிக அனாசியகமாக வெல்லும் சுனந்தா தன் மனசிக்கலை வெல்ல முடியவில்லை. அவர் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்கள் அனைவரும் மிக கெட்டவர்களாக இருப்பதே அதற்கு காரணம். 

இந்த சூழ்நிலையில் கணவருக்கு எந்த சந்தோஷமும் தர முடியவில்லை என்று சுனந்தா தன் கணவரிடன் தன்னை  விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழும் மாறு சொல்கின்றார். மாதவ் மறுத்து விட்டு நீ என்னை கூப்பிடும் பொழுது வருகிறேன் என்று கிராமத்திற்கு போய் விடுகிறார். 

இதற்கு இடையில் திவ்யா - ஆனந்த் விவாகரத்து வழக்கு வருகின்றது. இது வரை கொடுமை செய்யும் ஆண்களை பார்த்த சுனந்தா முதல் முறையாக ஒரு நல்ல ஆண்மகனை பார்க்கிறார். அதனால் அந்த வழக்கில் வெல்ல வாய்ப்பு இருந்தும் தோற்று போகின்றார். பின்பு நன்றி சொல்ல வரும் ஆனந்த் மூலமாக அடையும் தெளிவில் மீண்டும் கணவருடன் இணைகிறார். 

ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் அது குறித்த ஒரு செய்தியாக நாம் கடந்து போகும் பெண்களின் வாழ்க்கையில் அதன் பின்பு நடக்கும் மனச் சிக்கல்களை வைத்து ஒரு படத்தினை தயாரித்த பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள். அதிலும் அவர் இணைத்த TEAM தான் இதில் மிக முக்கியம். 

அருணா ராஜே - பல விருதுகள் வாங்கிய இயக்குனர். பெண்ணுரிமை சார்ந்த தளத்தில் மிக அதிகமாக இயங்கி வருபவரும் கூட. அதே போல் சிறந்த நடிகைகைக்கு விருது வாங்கிய உஷா ஜாதவ் மற்றும் மிக சிறந்த நடிகர்களான  கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர் என்று மிக பெரிய தலைகள் இணைத்த படம். எந்த இடத்திலும் இந்த கூட்டணி நம்மை ஏமாற்றவில்லை. 

மனநல மருத்துவர் ஒரு குரங்கு பொம்மையை தன்னை வன்புணர்வு செய்தவனாக நினைத்து கொண்டு தண்டனை தர சொல்லும் காட்சியில் உஷா ஜாதவின் நடிப்பு உச்சத்தில் இருக்கும். ஆக்ரோஷம், அழுகை, இயலாமை, கோபம், வெறுமை என்று அத்தனை உணர்வினையும் வெளிப்படுத்தி இருப்பார்.  படம் மொத்தத்தையும் தாங்கி நிற்பது உஷாதான். 

கிரிஷ் குல்கர்னி -  சுனந்தாவின் கணவர் மாதவ் ஆக சிறப்பாக UNDER PLAY செய்து இருப்பார். தமிழில் நிறைய படங்களில் சிவகுமார் செய்து இருப்பது போல். மனைவி மேல் தீரா காதல், அவரது வெற்றிகள் குறித்த பெருமிதம் என்று எல்லா இடங்களிலும் நிறைவாக செய்து இருப்பார். நிறைவாக தன் மனைவி இன்னும் ஒரு ஆடவனுடன் உறவு கொண்டு இருந்தார் என்பதை அறியும் பொழுது ஏற்படும் தயக்கமும், மனக்குழம்பமும் அதனை தாண்டிய காதலும் என்பதை அந்த காட்சியில் சிறப்பாக செய்து இருப்பார். படம் முழுவதும்  UNDER PLAY செய்தவருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. வீண் அடிக்காமல் சிக்ஸர் அடித்து இருப்பார்

சச்சின் கேத்கர் - ஆனந்த் - மனைவியின் கொடுமைகளுக்கு எதுவும் செய்ய முடியாமல் மகளுக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து போகும் அப்பாவாக நிறைவு.

எல்லாமே சிறப்பாக அமைந்த படம். ஆனால் படத்தின் இறுதியில் வரும் ஆனந்த் மற்றும் சுனந்தா வின் உடல் உறவும் அதனை நியாயப்படுத்த சுனந்தா பேசுவதும் எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. ஆனந்த் சொல்லும் SO WHAT தத்துவத்துடன் சுனந்தாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக முடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து. அந்த உடல் உறவு வலிந்து திணிக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு வேலை NETFLIX படம் என்றாலே அப்படி இருக்க வேண்டும் என்று எதுவும் சட்டம் உள்ளதோ தெரியவில்லை. 

யாரும் நன்னெறி வகுப்புகளுக்கு (MORAL SCIENCE CLASS ) இப்பொழுது போவது இல்லை என்பதால் நாம் அது குறித்து பேசுவதும் தவறோ என்று தோன்றுகிறது. கடைசி 20 நிமிடங்கள் மட்டும் படத்தில் சற்றே மாற்றி இருக்கலாம் 

​இந்த படத்தில் இன்னும் ஒரு நம்பிக்கையான தரும் ஒரு விஷயம். இரண்டு கணவர்களும் மிக நல்லவர்களா காட்டி இருப்பது தான். பொதுவாக இம்மாதிரி FEMINIST படங்களில் அனைத்து ஆண்களும் கெட்டவர்களே என்பது போல் வரும். இதில் அப்படி இல்லை.​

மிக சிறந்த படம். நிறைய இடங்களில் சின்ன சின்ன வசனங்களில், காட்சிகளில் பெண்கள் இன்னும் தடுமாறி கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கான உண்மையான விடியல் வரவில்லை என்பதை போகிற போக்கில் நமது முகத்தில் அறைந்தது போல் சொல்லிய விதத்தில் FIRE BRAND பார்க்க வேண்டிய படம்.




08 April 2020

​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன்


​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன் 
நடிகர்கள்: ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் 
பாடல்கள்/ இசை; சமந்த் நாக் 
ஒளிப்பதிவு மணிகண்டன் 
இயக்கம் ஆனந்த் ரவிச்சந்திரன்.
தளம் NETFLIX 

நன்றி: இந்த படத்தினை பார்க்க எனக்கு பரிந்துரைத்த தோழர் ராசா ரகுநாதன் அவர்களுக்கு 

கதை சுருக்கம்: 5 வயதில் பேத்திக்கு திருமணம் செய்து வைக்க முயலும் பாட்டி இடமிருந்து அவரது மகன் குடும்பம் விலகி சென்னை செல்கிறது. தாயாரும் தகப்பனாரும் இறந்த பிறகு அந்த பெண் தன் பாட்டி கூப்பிட்டதால் கிராமத்திற்கு வருகின்றார். ஆரம்பத்தில் பாட்டிக்கும் பேத்திக்கும் ஒத்து போகவில்லை. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசம் காட்டுகின்றார்கள். சென்னைக்கு திரும்பி போகும் பேத்தி கிராமத்திற்கு மீண்டும் வருகின்றார் அது ஏன் என்பது கிளைமாக்ஸ்.

யதார்த்தத்திற்கு நெருக்கமான படங்கள் அருகி விட்ட சூழ்நிலையில் இந்த படம் அந்த குறையினை போக்குகின்றது. கிராமங்களில் இறந்தவருக்கு முக ஒப்பனை செய்வார்கள் என்பது இது வரை நான் கேள்விப்படாத ஒன்று. படத்தில் மறைமுகமாக  காட்டுவது போன்று குறிப்பிட்ட சமூகத்தின் வழக்கமோ என்று தெரியவில்லை. நமது தொன்ம பழக்கத்தினை பற்றிய ஒரு புதிய அனுபவம்.

ஒப்பாரி வைப்பது ஒரு பெரிய கலை. இன்றும் எங்கள் கிராமத்தில் சிலர் உண்டு. அவர்கள் ராகம் போட்டு பாடும் ஒப்பாரியை கேட்கும் பொழுது, இறந்தவரே, நமக்கு இவ்வளவு பெருமையா என்று யோசித்து திரும்பி எழுந்து வந்து விடுவாரோ என்று நான் யோசித்தது உண்டு. நிறைய படங்களில் இந்த ஒப்பாரி பதிவு பண்ணப் பட்டாலும் அது நகைச்சுவையாக கடந்து போகும். ஆனால் இந்த படத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்து உள்ளது.

 ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் - இவர்கள் மூவரின் நடிப்பும் மிக சிறப்பு. 

 ஸ்ரீலேகா கிராமத்து அப்பத்தாவாக தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்து இருக்கார். அவரது கலை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்.  

 நிவேதிதா சதிஷ்  - சில்லு கருப்பட்டியில் மதுவாக சிறப்பாக செய்து இருந்தார். அடுத்த படங்களில் என்ன ஆவரோ என்று யோசித்து இருந்தேன். இந்த படத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கார். சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால்  நல்ல பெயர் கிடைக்கும். அதுவும் இரவில் அப்பத்தாவுக்கு தெரியாமல் வெளியில் போகும்பொழுதும், பேருந்து நிலையத்தில் குபேரனுக்கு ஆதரவாக பேசும் பொழுதும் சிறப்பாக செய்து இருப்பார். 

இவர்கள் இருவரையும் விட கதையில் அப்பத்தாவுக்கும், மீராவுக்கும் பாலமாக இருக்கும்  கப்பிரிலா செல்லுஸ்சின் நடிப்பு மிகவும் அருமை. இவர் இதற்குமுன் நடித்த படம் எதுவும் நான் பார்த்தது இல்லை. ஆனால் மிக சிறப்பாக கிராமத்து அமுதாவாக வாழ்ந்து இருக்கின்றார். துடுக்குத்தனம். தான் மரியாதை வைத்து இருக்கும் அப்பத்தாவின் பேத்தி என்று மீரா மீது காட்டும் பாசம். அந்த குடிகார பயலை கட்டிக்கிறதுக்கு வெறும் சிறுக்கியா இருந்து விடுவேன் என்று அவரது பாத்திர படைப்பு அருமையாக உள்ளது. 

ஆப்பநாடு என்ற ஊரில் கதை நடக்கிறது. கிராமத்தின் வெம்மையும் மனிதர்களின் உண்மையும் படம் முழுக்க நிரவி உள்ளது. கதையினை இசையும் ஒளிப்பதிவும் உறுத்தாமல் சுமந்து செல்கின்றது. 

படத்தில் ஒரே குறை - அது netflix படம் என்பதாலோ என்று தெரியவில்லை. மீரா புகைபிடிப்பது போல் காட்ட படுவது. NETFLIX ன் எல்லா படங்களிலும் கலாச்சார விரோதமாக காட்சிகள் வலிந்து திணிக்க படுவது போல் உள்ளது. அவர் புகைப்பிடிப்பது மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்று தெரிய வில்லை. ​அவருக்கு புகை பழக்கம் இல்லாதவராக காட்டி இருந்தாலும் படத்தில் எந்த வித்தியாசமும் தெரிந்து இருக்காது.​
இதனை விடுத்து விட்டு நல்ல கிராமத்து படம், நமது பண்பாடுகளின் கூறுகள் தெரிய வேண்டும்  என்று நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 

06 April 2020

பார்த்தது: ஷக்ரித்

பார்த்தது: ஷக்ரித் (Shagird ) (சீடன்)
நடிகர்கள்: நானா படேகர் , ரிமி சென், மோஹித் அக்லவாட் 
இயக்கம் திக்மான்ஷு துளியா 

கதை சுருக்கம்: லஞ்சம் வாங்கும் போலீஸார் நிறைந்த போலீஸ்  நிலையத்தில் லட்சியத்துடன் வேலைக்கு சேருகிறார் மோஹித். அங்கு அதிகாரியாய் இருக்கும் நானா படேகருக்கு அவரை ஏனோ பிடித்து விடுகிறது. அவரை தனது சீடன் போல் எல்லா இடங்களுக்கும் கூட்டி போகின்றார். ஒரு கட்டத்தில் சீடன் தனது குருவை மிஞ்சி செயல் பட ஆரம்பிக்கும் பொழுது நிகழும் பிரச்சனைகளே படத்தின் கதை 

நானா படேகரை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நடிப்பு ராட்சசன். இந்த படத்திலும் அதனை குறைவில்லாமல் செய்து இருக்கிறார்.  அதுவும் தன் குழுவில் உள்ள ஒருவன் தனக்கு எதிராக திரும்பிய செய்தி கேட்டு அவனை நேரில் சந்தித்து பேசும் பொழுது நானாவை ரசித்து பார்க்கலாம். 

கொஞ்ச நேரம் வந்தாலும் அனுராக் காஷ்யபின் நடிப்பு வேற லெவல்.

தற்கால இந்தியாவில் உள்ள ​அரசியல் வாதிகள், மாபியா கும்பல் மற்றும் போலீசிற்கு உண்டான தொடர்புகள், அதன் மூலம் ஒவ்வொருவரும் அடையும் பலன்கள் எல்லாம் கதையின் போக்கில் சொல்ல படுகிறது. தனது தேவை முடிந்தவுடன் தனது அடியாளை கொல்ல சொல்லும் அரசியல்வாதி, அதில் குறுக்கு வழியில் சம்பாதிக்க பார்க்கும் போலீஸ் என்று நமது நிகழ் கால அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மிக மெதுவாக செல்லும் திரைக்கதை ஒரு பலவீனம் என்றாலும் அதனை இறுதியில் வேகம் எடுக்கும் க்ளைமாக்ஸ் ஈடு கட்டி விடுகிறது.

நாங்கள் செய்யும் தொழில் தவறாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள நேர்மைதான் எங்களின் பலம் என்று சொல்லும் ஹவாலா புரோக்கர், கடைசியில் 18 கோடியை பார்த்ததும், இவ்வளவு பணத்தை பார்த்தது இல்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கொலைகாரனாக மாறுகிறார். 

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக குண முரண்களுடன் படைத்தது உள்ளது இயக்குனரின் பலம். அது தான் மெதுவாக செல்லும் கதையையும் சுவாரசியமாக ஆக்குகிறது.







Followers