19 November 2014

நாலு பேருக்கு நன்றி

உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி
உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி

இந்த பாடல் இடம் பெற்ற படம் சங்கே முழங்கு. எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடல். இந்த பாடலை பல முறை கேட்டு உள் ளேன். டி.எம்.எஸ். குரலில் உள்ள குழைவு நம்மை  நெகிழ வைத்து விடும். விழியோரங்கள் ஈரக் கசிவால் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விடுவது போல்  உணர்வு வரும்.

நேற்றும் இந்த பாடலை என் காரில் கேட்டு கொண்டு செல்லும் பொழுது என்னுடன் வந்த நண்பர் ஒரு கேள்வி எழுப்பினார்.

சார், உறவென்றும் பாசமென்றும் சொல்வது எல்லாம் ஓகே தான். ஆனால் பாருங்கள் ஒரே சம்பவம் ஒருவருக்கு துன்பத்தையும் மற்றவருக்கு இன்பத்தையும் தரும் என்று எப்படி சொல்ல முடியும்? என்று கேட்டார்.

நான் சொன்னேன், சார் பாடலில் கவிஞர் அப்படி சொல்லவில்லை. அவர் சொல்வது சிரிப்பதோ அழுவதோ ஒரே உள்ளத்தின் செயல்பாடு என்று தான். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி இந்த பாடலை தாண்டி சிந்திக்க சொல்கிறது. எந்த ஒரு விசயமும் நமக்கு மகிழ்ச்சியை தரும் பொழுது இன்னும் ஒருவருக்கு துன்பத்தை தருவது உண்டு. பாலியல் வன்முறைக்கு ஆட்படும் பெண்ணின் அழுகைதான் ஒரு குருர மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதில் ஒரு விஷயம் கவனித்தோம் என்றால் பண்பட்ட நாகரீக மனிதர்களின் உள்ளம் எல்லாம் பிறர் துன்பத்தை தன் துன்பமாகதான் நினைக்கும். இன்றும் கிராமப்புறங்களில் பேச்சு வார்த்தை கூட இல்லாத உறவுகள் ஒருவரது வீட்டில் துக்கம் என்னும் பொழுது வாசலிலாவது நின்று விட்டு செல்வதை பார்க்க முடியும். அதே போல் துக்க வீட்டில் நிகழ்சிகள் முடியும் வரை அதனை மதித்து தங்கள் வீட்டில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ ஆடம்பரமோ இன்றி செயல் படுவார்கள். 

ஆனால் அதே விஷயம் நமது நகர் புறங்களில் நடக்கும் பொழுது என்ன நடக்கிறது என்று நாம் சிந்தித்து பார்த்தால் நாம் நாகரீகமானவர்களா என்ற சந்தேகம் நமக்கு வந்து விடும். சமீபத்தில் எனது நண்பரின் மகன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். எல்லோரும் மிகுந்த வருத்ததுடன் இருக்கும் பொழுது பக்கத்துக்கு வீட்டில் தொலைக்காட்சியில் குத்து பாட்டு உரக்க ஒலித்தது. ஏதோ தவறுதலாக வைத்து விட்டார்கள் என்று நினைத்து ஒருவர் போய் அவர்களிடம் சொன்னதற்கு "SO WHAT" இது எங்கள் வீடு என்று சொல்லி விட்டு படகென்று கதவை தாளிட்டார்கள். இவர்களை போன்றவர்களை வைத்து நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான் என்று சொன்னேன்.

அப்படியே ஆரம்பித்த பேச்சு பாடலில் வரும் ஆற்றுவெள்ளம் போல் கிளை பிரித்து எங்கெங்கோ ஓடி மீண்டும் பாடலிலேயே வந்து மையம் கொண்டது. 

"வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம், வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்" என்ற வரியில் எங்களது விவாதம் வந்து நின்றது. கவிஞரின் கற்பனை எப்படி போய் உள்ளது பாருங்கள். இந்த பாடலில் இறந்த பிறகு வருபவருக்கு மௌனத்தாலே நன்றி சொல்வோம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமது யதார்த்த வாழ்வில் எல்லா விசயத்துக்கும் நம்மால் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியுமா என்ன? 

இன்னும் சொல்ல போனால் நன்றி என்று சொல்லி விட்டு விட முடியாத விஷயங்கள் நமது வாழ்க்கையில் நடந்தது இல்லையா என்ன?

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் எனது மனைவி இரண்டு மகன்களும் அப்பொழுது அவர்கள் சிறுவர்கள், திருச்சியில் இப்பொழுது மெகா ஸ்டார் என்ற பெயரில் இருக்கும் அன்றைய KT தியேட்டரில் இரவு காட்சி SUPER MAN படம் பார்த்து விட்டு வரும் பொழுது மகாத்மா பள்ளி அருகில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

நள்ளிரவு 
தூங்கும் குழந்தைகள் 
வார இறுதி நாள். 
எனக்கு ஸ்டெப்னி மாற்ற தெரியாது. 

சில நம்பர்களுக்கு செல்லில் கூப்பிட்டால் யாரும் எடுக்கவில்லை. நானாக இருந்தாலும் சனி இரவு செல்லை எடுத்து இருப்பேனா என்று சந்தேகம்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சமயத்தில் ஒருவர் பைக்கில் வந்தார். நாங்கள் நிற்பதை பார்த்து என்ன சார் பிரச்னை என்று கேட்டார். விபரத்தை சொன்னவுடன் நான் மெக்கானிக் தான் சார், டூல்ஸ் இருந்தால் ஸ்டெப்னி மாற்றி விடுவோம் என்று சொல்லி விட்டு ஸ்டெப்னியை கழற்றி பார்த்தால் காற்று இல்லை. என் மனைவிக்கு அழுகையும் செகண்ட் ஷோ கூட்டி வந்த என் மீது கோபமும் என்று ஒரு கலவையாக நின்று கொண்டு இருந்தார். 

இப்பொழுது எனக்கு அந்த நிலைமை வந்து விட்டது. ஸ்டெப்னியில் காற்று இல்லாமல் இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது மெக்கானிக் என்னை பார்த்து பரிதாபப்படும் நிலைமைக்கு வந்து விட்டார். அப்புறம் அவரே ஒரு ஆலோசனை கொடுத்தார். சார் நான் இந்த டயரை எடுத்துகிட்டு போய் பெட்ரோல் பங்கில் காற்று பிடித்து விட்டு வரேன் சார் என்று சொன்னார். என்னடா நமக்காக ஒருத்தர் போய் இவ்வளவு சிரமம் படுவதா என்று நினைத்து, நானும் கூட வாரேன் நாம் போய் KT தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் பங்கில் காத்து பிடிச்சுட்டு வந்துடுவோம் என்று சொன்னேன். 

சார் லேடீஸ்ம் குழந்தைகளும் தனியா இந்த ராத்திரியில் விட்டுட்டு நாம போறது நல்லது இல்ல, என்ன நம்பினா டயரை கொடுங்க நான் தூக்கிட்டு போய்ட மாட்டேன் என்றார்.

அடுத்த அரை மணியில் டயருக்கு காற்று அடித்து ஸ்டெப்னி மாற்றி எல்லாம் முடித்து கொடுத்தார். நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தேன். 

அவர் ரொம்ப யார்த்தமாக இருக்கட்டும் சார் நான் என்ன பஞ்சரா பார்த்தேன் சும்மா காத்துதானே சார் அடிச்சிட்டு வந்தேன். இந்த டயரும் பஞ்சரா என்று தெரியாது கொஞ்சம் கவனமா வேகமா வீட்டுக்கு போய்டுங்க  என்று சொல்லி விட்டு அவரது பைக்கை ஸ்டார்ட் செய்தார். நன்றி என்று சொல்ல வார்த்தை கூட இல்லாமல் மௌனமாக வந்தோம். 

எதற்கும் ஒரு விலையுண்டு எதையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற என் எண்ணங்களை டயரில் இருந்து பிடிங்கி விடப்படும் காத்து அதன் மூல கூறான இயற்கையுடன் கலந்த பின் தட்டையாய் கிடக்கும் டயரை போல் என் மனசும் கிடந்தது. 

நண்பரிடம் கேட்டேன் மௌனத்தாலே நன்றி சொல்வது தெரிந்ததா என்று. அவர் மௌனமாக இருந்தார்.

www.youtube.com/watch?v=JGdBvKk13jo என்ற லிங்கில் இந்த பாடலை உணர்ந்து பாருங்கள் 


14 November 2014

கத்தி படமும் அது சொல்லும் தகவலும் (மெசேஜ்)

கத்தி படமும் அது சொல்லும் கருத்தும்  (மெசேஜ்)


கத்தி  படத்தில் நிறைய message இருக்கு நீங்க அவசியம் பார்க்கணும் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஏதோ மெசேஜ் உள்ள படங்கள் மட்டும்தான் நான் பார்ப்பேன் என்ற விரதத்தில் இருப்பது போல. வெளியாகும் அத்தனை படங்களையும் இன்னும் சொல்ல போனால் அதில் நடித்தவர்களே பார்க்க யோசிக்கும் படங்களையும் நான் பார்த்து விடுவேன் என்று நண்பருக்கு தெரியவில்லை.

எனக்கு படத்திலும் படம் சார்ந்து வெளியிலும் தெரிந்த மெசேஜ்கள்

முதலில் தமிழர் அமைப்புகள் கொடுத்த மெசேஜ் 


மிகவும் உக்கிரமாக போராடிய அமைப்புகள் கடைசியில் LYCA  என்ற பெயரை எடுத்து விட்டால் போதுமானது என்று சொல்லி விட்டார்கள்.அது எப்படி உடனே அது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாறி விடும் என்று தெரியவில்லை.

ஆனால் இன்று என்ன நடந்து உள்ளது ?

தணிக்கை துறை சான்றிதழில் (Censor Certificate ) மிக பெரிய எழுத்துகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளது. ஞானம் புரொடக்சன்ஸ் என்று போடும் பொழுது திரை அரங்கில் பலர் லைகா பெயர் வராது என்று சொல்வதை கேட்க முடிந்தது. இது விஸ்வரூபம் படத்தின் போதும் நடந்தது. மௌனமாக்க பட்ட இடங்களில் என்ன வசனம் வந்து இருக்கும் என்பதை மக்கள் பத்திரிகை வாயிலாக படித்து கொண்டு வந்து மிக உரக்க சொல்லி கொண்டு இருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் என்ற இடத்தில் சுபாஷ்கரன் என்ற பெயரும் வருகின்றது. அவர் தானே லைகா நிறுவனத்தின் முதலாளி. அவர் பெயர்  இருந்தால் பரவாயில்லை. ஆனால் லைகா பெயர்  இருக்க கூடாது என்பது என்ன விதமான தமிழ் தேசியம் என்று எனக்கு புரியவில்லை.

இதை விட இதில் உள்ள மிக முக்கியமான அம்சம் கத்தி படம் இது வரையிலுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக தகவல். இந்த பணத்தில் பாதி சுபாஷ்கரனுக்கு தானே போகும். அது பரவாயில்லையா ?. இதனை யார் தெளிவு படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

பேசும் பிரச்சனை: 


கத்தி படம் முன் வைக்கும் கருத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட கூடாது. விவசாய வாழ்வாதாரங்கள் அழிக்க பட கூடாது. மிகவும் சரியான கருத்து. இன்று நமது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே தேவைப்படும் கருத்து.

இது எத்தனை பேருக்கு போய் சேர்ந்து இருக்கும் என்பது தான் மிக பெரிய கேள்வி.

முதலில் பலர் விஜய் இதனை சொல்ல தகுதி கிடையாது. அவரே கோலா விளம்பரத்தில் நடித்தவர் என்ற  விமர்சனத்தை முன் வைத்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அவர் இப்பொழுது உண்மை நிலைமை தெரிந்து மாறி இருக்கலாம். அல்லது அவருடைய அரசியல் ஆசைகளுக்கு அடித்தளமாக இந்த மாதிரி எழுச்சி படங்கள் உதவலாம் என்று நினைத்து இருக்கலாம்.

ஒரு பழைய படத்தில் திரு M .R . ராதா அவர்கள் சொல்வார் " சொல்றவன் யார்னு பாக்காதே சொன்ன விஷயம் சரியானு பார்" என்று.

அதன்படி பார்த்தால் இது ஒரு முக்கியமாக பேச வேண்டிய விசயம்தான். மற்ற விஷயங்கள் எப்படியோ மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றி ஒரு நாலு பேர் பேச வைத்துள்ளது. அந்த வகையில் நல்லது தான். கத்தி பட பாணியில் சூரியூரில் விவசாயிகள் போராட்டம் என்று தினத்தந்தி செய்தி போட உதவி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம் சூரியூர் விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அது இப்பொழுதான் பேச படுகின்றது. இரண்டாவது அவர்கள் எதிர்த்து போராடும் நிறுவனத்தின் சார்ந்த திரை அரங்கில் தான் கத்தி படம் ஓடுகிறது.


சரி மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் இனி என்ன நடக்கும்?

எதுவும் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. .நாலு நாளைக்கு மக்கள் பேசுவார்கள் அவ்வளவுதான்.

குடிப்பது தவறு என்று தன்னுடைய அனைத்து படங்களிலும் MGR வலியுறுத்தி வந்தார். ( அவரே பின்பு மதுக்கடைகளை மூடவில்லை என்பது வேறு விஷயம் ) அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம். MGR ரை விட விஜய் பெரிய ஆளுமை கிடையாது. அதனால் இந்த படத்தின் கருத்தினை உள்வாங்கி மாபெரும் புரட்சி வர போவது கிடையாது.

கேரளத்தில் ஒரு டவுன் பஞ்சாயத்து தீர்மானம் போட்டு கோலா நிறுவனம் ஒன்றினை நிறுத்தியதாக செய்தி தாளில் முன்பு படித்தாக நினைவு.

ஆனால் இங்கு தமிழகத்தை பாலைவனமாக்க போகும் மீத்தேன் திட்டம் பற்றி திருச்சியில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. தமிழக பொதுப்பணி துறையில் பணி ஆற்றிய மிக மூத்த பொறியாளர்கள் ஒன்று கூடி நடத்தினார்கள். அதிக பட்சமாக 800 பேர் வந்து இருப்பார்கள். இது தான் நமது தேசம்.

எனக்கு படத்தில் இட்லி வசனம் வந்த பொழுது ஒரு சந்தேகம் வந்தது. காங்கிரஸ், பிஜேபி என்று பலரை சந்தித்த விஜய் எப்பொழுது கம்யூனிஸ்ட் தோழர்களை போய் பார்த்தார் என்று. தா. பா அவர்கள் EVKS  போல் ஏமாறாமல் முழுமையான உண்மை அறிந்த பின் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா என்று சொல்வது நல்லது. விஜயும் ஒரு ஜூனியர் கார்த்திக் தான்.

சரி கத்தி படம் வேற என்ன சொல்லுது ?


சுறா, குருவி, போல நம்மை சோதிக்கவில்லை என்று சொல்கிறது. எனக்கு கிடைத்த மெசேஜ் இது தான்.


















26 January 2014

மாலினி 22 பாளையம்கோட்டை

மாலினி 22 பாளையம்கோட்டை

நடிகர்கள்: நித்யா  மேனன் , கிரீஸ், நரேஷ் , கோவை சரளா
இசை: அரவிந்த் - ஷங்கர்
பாடல்கள் : நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளை
திரைக்கதை , வசனம் , இயக்கம்: ஸ்ரீபிரியா


தன்னை காதலித்து ஏமாற்றியவனை ஒரு பெண் பழிவாங்கும் கதை. 22 FEMALE KOTTAYAM   என்ற மலையாள படத்தின் remake. இந்த படம் மலையாளத்தில் ஓஹோ என்று ஓடியதாக சொன்னார்கள். மலையாள சினிமாவிலும் கற்பனை வறட்சி வந்து விட்டது போலும்.

நித்யா மேனன் மிக அருமையாக நடித்து இருக்கிறார். அதுவும் போலீஸ் பிடிக்கும் பொழுது வருண் (கிரீஸ்) கண்டு கொள்ளாமல் போகும் பொழுது அவரது கண்களில் ஒரு ஏக்கமும் இயலாமையும் தெரிகிறது.

சிறைச்சாலை காட்சிகளில் ஏகப்பட்ட எதிர்பார்த்த காட்சிகள். இந்த படத்தில் climax மிக அருமையாக இருக்கும் என்று படம் குறித்த செய்திகளில் வந்து இருந்தது. ஆனால் நிஜத்தில் சவுதியில் கொடுக்கும் தண்டனையை கொடுத்து இருக்கிறார்கள் இதில் என்ன புதுமை என்று தெரியவில்லை.

இடைவேளை விடும் பொழுது மாலினி மீது வரும் பரிதாபத்தை அடுத்து அவர் பழி வாங்கும் பொழுது ஆக்ரோஷமாக மாற்றி இருக்க வேண்டும் அதை செய்ய இயக்குனர் தவறி விட்டார்.

மாலினியுடன் தங்கி இருக்கும் ஜென்சி என்ற பெண் ஒரு வயதானவருக்கு "தோழியாக" இருப்பதையும் அதனை சரளாவும், மாலினியும் எந்த ஒரு விகல்பம் இல்லாமல் ஏற்று கொள்வதும் தமிழ் படங்களுக்கு புதுசு . கலாச்சார காவலர்கள் பொங்க வேண்டிய ஒரு விஷயம். அதை தவிர இந்த படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ரொம்ப நாட்களுக்கு முன்பாக மாதவி நடித்த நிரபராதி என்றொரு படம் வந்தது. அதிலும் இப்படித்தான் தன்னை கெடுத்தவர்களை பழி வாங்குவார். அது கூட கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்த நினைவு அல்லது அந்த வயதில் அப்படி தோன்றியதா என்றும் தெரியவில்லை.

இப்பொழுது தியேட்டர்களில்  MGR நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் Trailer போடுகிறார்கள். இந்த படத்தின் இடைவேளை விட்டவுடன் பெண்கள் பகுதியில் இருந்து டேய் ஆயிரத்தில் ஒருவன் போடுடா என்று சத்தம். நிமிர்ந்து நில், கதிர்வேலன் காதல் எல்லாம் போடும் பொழுது வராத கைதட்டல் எல்லாம் ஆயிரத்தில் ஒருவன் போடும் பொழுது தியேட்டரே அலறியது . இன்னும் இரட்டை இலைக்கு இருக்கும் செல்வாக்கின் காரணம் இவர்கள்தான்.

படத்தை பற்றி: பேலஸ் தியேட்டரில் முட்டை போண்டா மிக நன்றாக இருக்கும். வேறு என்ன சொல்ல. மிக அருமையான படமாக வந்து இருக்க வேண்டிய கதை

16 January 2014

கருப்பாயி என்கிற நூர்ஜெஹான் - அன்வர் பாலசிங்கம்

இந்த வாரம் இரண்டு நாவல்கள் படித்தேன். இரண்டும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவையாக அமைந்தது எதிர்பாராத ஒரு விஷயம். கருப்பாயி என்ற நூர்ஜெஹான் என்ற நாவல் திரு அன்வர் பாலசிங்கம் எழுதியது. மற்றொரு நாவல் டாக்டர் ஹிமான சையது என்பவர் எழுதிய வெப்ப மூச்சுக்கள் .

இதில் கருப்பாயி என்ற நூர்ஜெஹான் நாவலை வாசிக்க சொல்லி எனது நண்பர் பாவலர் ராசா ரகுநாதன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக சொல்லி இருந்தார். அன்வர் பாலசிங்கம் எழுதிய செந்நீர் என்ற நாவலை ஏற்கனவே படித்து இருக்கிறேன். தமிழ் தேசியம் சார்ந்த ஒரு எழுத்தாளர். அதனால் நிச்சயமாக நல்ல கருத்துடன் எழுதி இருப்பார் என்ற நம்பிக்கை கொண்டு, நானும் உடனே புத்தகத்தை வாங்கி ஏற்கனவே படிக்காமல் வைத்து இருக்கும் புத்தகங்களோடு அடுக்கி வைத்து விட்டேன். இதில் ராசாவை நான் எப்படியும் மாதம் ஒரு முறையாவது சிந்தனை அரங்க கூட்டத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதில் அவர் என்ன படித்து விட்டீர்களா ? என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று முன்னுரிமை கொடுத்து படிக்க எடுத்தேன். அதனை முடிக்கும் தருவாயில்தான் எனது மூத்த மகன் மது நூலகத்தில் இருந்து எடுத்து வந்த வெப்ப மூச்சுக்கள் நாவல் குறித்து விவாதித்தான். சரி அதனையும் படித்து விடுவோம் என்று ஒரே மூச்சில் இரண்டு நாவல்களையும் படித்து முடித்தேன்.

பொதுவாக நம்மில் பலருக்கு மாற்று சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய நடைமுறைகள் பற்றிய புரிதலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ நாம் காட்டுவதில்லை. இசுலாமிய நண்பர் வீட்டு விசேசம் என்றால் பிரியாணி மட்டுமே நாம்  நினைவில் இருத்தி கொள்கிறோம். தெரிந்து கொள்ள நமக்கு நேரமில்லையா அல்லது மனமில்லையா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி.

 இந்த கதை நான் சிறுவனாக இருந்த பொழுது அனேகமாக 1981 அல்லது 1982 ஆக இருக்ககூடும். அப்பொழுது நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் இந்துக்கள் எல்லாம் ஒரே நாளில் இசுலாமியர்களாக மாறி விட்டதாக பெரிய பரபரப்பு இருந்தது. சாதிய கட்டமைப்பும், மதம் சார்ந்த குழப்பங்களும் புரியாத வயது. மதம் மாறினா மாறி விட்டு போகிறார்கள் அதற்க்கேன் இவ்வளவு கூச்சலும் குழப்பமும் என்று ஒரு புரியாத குழப்பம். அப்படி மாறிய ஒரு கிராமம் - இன்று பிலால் நகர் என்று பெயர் பெற்று உள்ளது. அந்த ஊரின் மக்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைக்களும்தான் கருப்பாயி என்ற நூர்ஜெஹான் புதினத்தின் அடிப்படை இழை.

கதையின் ஆரம்பமே நூரின் தற்கொலையில் தான் தொடங்குகிறது. நூர் தற்கொலை செய்து கொண்டதின் காரணம் என்ன? அதற்கும் மதமாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக விவாதிக்கிறது. நூரின் அப்பா இந்த மதமாற்றத்திற்கு உந்து சக்தியாக இருந்த மிக சிலரில் ஒருவர். அதே சமயம் நூரின் சித்தி பன்னிர் இந்த மாற்றத்திற்கு உடன் படாமல் இந்துவாகவே இருக்கிறார். அவரது பாசமும் அந்த போராட்டத்தின் முடிவில் அவரது தற்கொலையும், மிகுந்த தைரியசாலி துணிச்சல் மிக்கவர் என்று
சொல்லப்படும் நூரின் வாப்பா மற்றும் அவரது மனைவியும் தற்கொலையும் மதம் மாறியதால் எந்தொவொரு வாழ்வியல் முன்னேற்றமும் இல்லை என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. கதையில் எந்தவொரு தீர்வையும் அன்வர் எடுத்து வைக்கவில்லை. எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு முக்கியம் என்றாலும் அந்த தீர்வே புதிய சிக்கல்களுக்கு அடிக்கோலி விடுமோ என்று அவர் விட்டு விட்டாரா என்று தெரியவில்லை. பிரச்சனைகளில் உள்ள தீவிரத்தை அதனால் பிற மனிதர்கள் படும் வேதனையை கதாபாத்திரங்களின் விவாதங்கள் மூலம் மிகவும் தெளிவாக எடுத்து உரைக்கின்றார்.

பிலால் நகரில் உள்ள திருமணம் அல்லது நிக்காஹ் ஆகாத முப்பது முதிர் கன்னிகளின் வாழ்வியல் சிக்கல்கள்தான் கதையின் விவாத பொருள். " புது முஸ்லிம் " என்ற சொற்றொடர் அவர்களை மற்ற முஸ்லிம்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது . பிலால் நகரின் மக்கள் நிறைய பணம் வாங்கி கொண்டுதான் மதம் மாறி கொண்டார்கள் என்று பிற மதத்தினரை யோசிக்க வைக்கிறது. பேருந்தில் சில்லறை இல்லாத காரணத்தினால் ரூபாய் நோட்டை கொடுக்க , உங்களிடம் எல்லாம் சில்லரை எங்கே இருக்க போகிறது என்று பேருந்து நடத்துனரை கேலியாக பேச வைக்கிறது.

மத மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக சாதி துவேஷம் சுட்டி காட்டப் படுகின்றது.
 " உலகிலேயே இல்லாத நடைமுறையாய் உழைப்பவனை, கீச்சாதி பயலுவோ" என்று அடைமொழி கொடுத்த இந்த தேசம், முன்னொரு காலத்தில் அப்பூர்வ குடிகளின் பூமியாய் இருந்ததை கவனமாக மறந்து விட்டது"

"ஏய்  சாதி வெறி பிடிசவுங்களா  உங்களால எங்க குலமே விழுந்து கிடக்கேடா  பாவியலா "
போன்ற வரிகள் அக்கருத்தை வலியுறுத்துவது போல் அமைந்து உள்ளது.

ஒரே சாதி தான் என்றாலும் , இரு வேறு நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் தரும் நடை முறை ஆசார நிர்பந்தங்கள், அதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும்  ஆளுமைகள் என்ற விரிவான தளத்தில் கதை பயணிக்கிறது.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது முக்கியம் என்றாலும், எந்த தீர்வையுமே அன்வர் முன்வைக்கவில்லை. பல தீர்வுகளே புதிய சிக்கல்களுக்கு அடிகோலி விடுமோ என்ற எண்ணத்தில் விட்டு விட்டாரா என்று தெரியவில்லை. பிரச்சனைகளில் உள்ள தீவிரத்தை, அதனால் கதை  மனிதர்கள் படும் வேதனையை கதாபாத்திரங்களின் விவாதங்கள் மூலம் மிகவும் தெளிவாக எடுத்து உரைக்கின்றார்.

இதே "புதிய முஸ்லிம்" குறித்து ஒரு கதையை நான் வெகு காலத்திற்கு முன்பாக படித்த ஞாபகம். கதையின் பெயரோ எழுதியவர் பெயரோ சரியாக ஞாபகம் இல்லை. அனேகமாக ஜே . எம் . சாலியாக இருக்கலாம். குமுதம் அல்லது சாவி இதழில் படித்த ஞாபகம்.

அந்த கதையிலும் ஒரு முதிர் கன்னி உண்டு. அவளுக்கு திருமணம் செய்வதற்காக ஊர் பெரியவர்களிடம் அந்த பெண்ணின் தந்தை கேட்டு செல்லும் பொழுது ஒருவரும் உதவி செய்ய முன் வர மாட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் புதியதாக மதம் மாறி வந்த ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு உதவி செய்வார்கள். புதுசா வந்த தான் மரியாதை என்று அந்த முதியவர் சொல்வதுடன் கதை முடிவது போல் இருக்கும். வந்தாரை வாழ வைக்கிறார்கள், நம்மை ஏங்க வைக்கிறார்கள் என்ற ரீதியில் கதை போகும். கிட்டத்தட்ட அன்வரின் கருத்தியலுக்கு எதிரான கருத்தை கொண்ட சிறுகதை அது. 

இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான். கதாபாத்திரங்கள் பேசுவது தெளிவாக யாருடைய கருத்து என்று புரிவது போல் எழுதப்படவில்லை என்பது ஒரு பெரும் குறையாக எனக்கு தெரிந்தது. எனது நண்பர் திரு சரவணன் அவர்களும் இதே கருத்தினை பிறகு பேசும் பொழுது பகிர்ந்து கொண்டார். 

மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் ஆழ்ந்து படிக்க வேண்டிய ஒரு புதினம்.

Followers