31 December 2012

நட்பும் துரோகமும்


இன்று காலையில் திரு பிரேம் உடன் ISO audit க்காக எங்கள் தொழிற்சாலைக்கு செல்லும் பொழுது அவர் ஏன் நான் நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை என்று கேட்டார்.அப்பொழுது தான் யோசித்து பார்த்தால்  சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியது. அதற்கு பிறகு எதுவுமே எழுதவில்லை. எழுதாமல் போனதற்கும்  குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை. 

எனது தோழி எழில்விழியிடம் மயானத்தில் ஏற்பட்ட ஞான விழிப்பு பற்றி எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அது குறித்து எழுத வேண்டிய மன அமைதி எனக்கு எனது அலுவலில் உள்ள வேலை பளுவின் காரணமாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனை எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டே எதுவும் எழுதாமல் விட்டு விட்டேன் என்று தான் தோன்றுகிறது. வாலி ஒரு பாடலில் எழுதியது போல "ஏக்கத்தில் பாதி தூக்கத்தில் பாதி போனது போக எது மீதி" என்பது போல் எதையோ நினைத்து கொண்டே பல விஷயங்களை செய்யாமல் விட்டு விடுகிறோம்.

நான் எதுவும் எழுதுவதால் காவிரியில் தண்ணீர் வந்து விட போவதும் இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு தீரவும் போவதும் இல்லை. பின்னே எழுதி என்ன செய்ய என்ற அலுப்பாகவும் இருக்கலாம். இப்படி எல்லாம் எழுதினால் தான் ஒரு பெரிய எழுத்தாளருக்கு உள்ள "கெத்து" இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். சொல்லிவிட்டு நட்பை பற்றி எழுதுங்கள் என்றும் ஒரு இலவச ஆலோசனை கொடுத்தார். நட்பு பற்றி எழுத வேண்டும் என்றால் துரோகத்தை பற்றியும்  எழுத வேண்டும் என்று ஒரு extra bit வேறு போட்டார். சரி அவரது ஆலோசனையை செயல் படுத்துவோம் என்று எழுத ஆரம்பித்தேன்.

என் எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் என் நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று என்று ரஜினி ஜக்குபாய் விளம்பரத்தில் சொல்லி இருந்தார். அப்பொழுது சரிவர புரியாத இந்த பஞ்ச் வசனம் அவரது பிறந்த நாள் பேச்சில் தெளிவானது. என்னை பொறுத்த வரையில் எதிரிகள் நமது முன்னேற்றத்துக்கு உதவுவார்கள் ஆனால் துரோகிகளோ நாம் மாபெரும் வெற்றி பெற தேவையான வேகத்தினை நமக்கு கொடுப்பார்கள்.

கர்ணன் துரியோதனன் மீது வைத்தது ஆழமான எதிர்பார்ப்பு இல்லாத நட்பு. ஆனால் துரியோதனின் நட்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அவனது எதிரிகளை வெல்ல கூடிய திறமை கர்ணனிடம் இருந்தது. அந்த திறமை துரியோதனனுக்கு தேவையாக இருந்தது. 

கர்ணனை அரசனாக்கினான் அதனால்தான் கர்ணன் நட்பு பாராட்டினான் என்று சொல்வோரும் உண்டு. அப்படி அரச பதவிக்கு ஆசை பட்டு இருந்தால் குந்தி கூப்பிட்டவுடன் போய் இருப்பான். மாறாக தோல்வி உறுதி என்று தெரிந்தும் கவுரவர்கள் பக்கம் நின்று இருக்க மாட்டான். தேவையின் காரணமாக ஏற்படும் நட்பு கூட துரோகம்தான்.

எதிர்பார்ப்பு இல்லாத நட்பு என்று எதாவது உள்ளதா என்று யோசித்து பார்த்தால் அப்படி எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. வெங்காயத்தை உரித்து பார்ப்பது போல் பார்த்தால் எல்லா நட்பும் ஒன்றும் இல்லை என்பது போல தெரிகிறது.
நட்பு என்று ஒன்று உருவாகும் பொழுது,  எந்த  எதிர்பார்ப்பும்  இல்லாமல் இருக்கும் வரை எந்தவிதமான பிரச்னையும் இல்லை. எதிர்பார்ப்பு வரும்பொழுது அங்கு ஏமாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது. ஏமாற்றம், ஆத்திரமாகவும், வடிகால் கிடைக்காத ஆத்திரம் துரோகமாகவும் மாறுகிறது. யோசித்து பார்த்தால் துரோகம் கூட நட்பின் ஒரு நிறைவேறாத கட்டமோ என்று தோன்றுகிறது. எல்லா நட்பிலும் ஏதாவது  ஒரு எதிர்பார்ப்பும், புதைக்கப்பட்ட கண்ணி வெடி போல் ஒரு துரோகமும் ஒளிந்தே இருக்கிறது.

19 May 2012

சிந்தனை அரங்கம் - 1

சிந்தனை அரங்கம் - 1

"மின் பற்றாக்  குறை - பிரச்சினைகளும்  தீர்வுகளும் "


நவீன பொருளியல் வாழ்வில் மனிதர்கள் அனைவரும் நுகர்வோர்களாக மாற்றப்பட்டுசமூகஇயக்கம் என்பது தனி மனித வாழ்க்கையின் நிறைவுகளே என்பதாக  மாறி போய்விட்டது.



முன் எப்பொழுதையும் விட தற்கால வாழ்க்கையானது  முழுவதும்  சுயநலம்  சார்ந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அதிலும்  குறிப்பாக  குடும்ப  அலகுகளும்  சிதைக்க பட்டு நான், எனது  என்கின்ற  சொல்லாடல்களும்  நிரம்பி வழிவதாக உலகம் மாறி விட்டது.

இத்தகைய சூழலில் தான் கடந்த 23. 04. 2012 ஞாயிற்று கிழமை காலை 10.30  மணி  அளவில் இந்த கூடல் நிகழ்ந்தது. சமூகம் மீதான தொடர்  விமர்சனங்களையும், சொல்லேரிதல்களையும் தவிர்த்து ஆக்க பூர்வமான கூடல் தான் "சிந்தனை அரங்கம் " எனும் பெயரிலான மேற்சொன்ன நிகழ்வு.

நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நிகழ்ந்த அவ்வரங்கில் பொறி. இரவி , திருவாளர்கள்  அருள், முகமது இப்ராகிம், ஆத்மனாதன், சரவணன், கவித்துவன், ராஜா ரகுநாதன், இனியன்  ஆகியோர்  கலந்து  கொண்டு  தம்  கருத்தையும்  தீர்வுகளையும்  முன் மொழிந்தனர்.

மின் வெட்டினால் ஏறக்குறைய 60 % சிறு தொழில்கள்  மிகுந்த  பாதிப்பு  அடைந்து  உள்ளன. சென்ற  வாரம்  ஒரு  அச்சக  வாசலில்  பார்த்த  ஒரு  அறிவிப்பு இந்த அவலத்தின் உச்சம் என சொல்லலாம் -

 "எனக்கு  பிரிண்டிங்  வேலை  கொடுக்க வரும்  நீங்கள் எக்காரணம்  கொண்டும்  வேலை தாமதமாக  நடக்கிறது  என்று  சண்டை  போடாமல்  இருப்பிர்கள் என்றால் வேலை  கொடுக்கவும்  இல்லை  என்றால்  உங்கள்  வேலை தேவை இல்லை."

எந்தவொரு  நிறுவனமும் வேலை வேண்டும் என்று தான் சொல்வார்கள் இவர் 
ஏன் இப்படி சொல்கிறார் என்று விசாரித்தபொழுது மின் வெட்டின் கோர முகம் தெரிந்தது. இதனை  அடிப்படையாக  கொண்டு மின்சாரம்  இருக்கும் நேரத்தில்  தொழில்  செய்வதின் சிக்கல்கள் விவாதிக்கப் பட்டன. 

மின் பற்றாக்  குறை - ஏன் ?

01. பன்னாட்டு  நிறுவன  பெருக்கத்தினால்  அவைகளுக்கு  வழங்கப்படும் மின்சாரத்தினால் நமது பயன்பாற்றிக்கான மின் தேவையில் பெரும் அளவு குறைகிறது.

02. மின்சார கடத்தியாக உபயோகப் படுத்தும் உலோக  கம்பிகளின்  தரக்   குறைவினால் சுமார் 22 % அளவிற்கு மின் இழப்பு ( Transmission Loss) ஏற்படுகிறது. குறிப்பாக தர குறைவான கம்பிகள் வாங்குவதின் பின்னணியில் பெரும்  ஊழலும் ஒளிந்து உள்ளது.

03. 2005 க்கு பிறகுதான் மின்வெட்டு தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக
உருவெடுத்தது . பன்னாட்டு   நிறுவனங்களுடன் ஒப்பந்தம்  போடுவதில்  ஆர்வம் காட்டும் அரசுகள் தொலை நோக்கு பார்வையுடன்  உரிய  மின்  திட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்தவில்லை.

04. தமிழக எல்லைக்குள் ஏற்கனவே இருக்கும் மின் திட்டங்களில்  மத்திய  அரசின்  நெருக்குதல் காரணமாக உரிய மின்சார அலகினை  தமிழகம் பெற  முடியாமல் போகின்றது.


மின் பற்றாக்  குறை - பாதிப்புகள் 


ஏறக்குறைய  60 % சதவிகித சிறு தொழில்கள் பாதிக்க பட்டு உள்ளன. உற்பத்தி சாரத தொழில்கலான மருத்துவமனைகள், Scan, X Ray போன்ற தொழில்கள் பெரும் சிக்கலில் உள்ளன. தற்காலிக ஏற்பாடாக Genset பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் சுற்று சுழல் மாசு கேடு, எரி பொருள் இழப்பு, அதிகரிக்கும் உற்பத்தி செலவுகள்  போன்றவை  பிரச்சனைக்குரிய  காரணிகள் ஆகின்றன.

திருச்சியில் உள்ள BHEL லின் துணை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் 16000 பேர் வேலை இழக்க மின்வெட்டே முதன்மை காரணியாகும். ஒரு 
மாவட்டத்திலேயே இந்த நிலைமை என்றால் மொத்த தமிழகத்திற்கும்  நிலைமை எப்படி இருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது.

 தொடர் மின்வெட்டினால் கைவிளக்கேந்திய கற்கால வாழ்க்கைக்கு  தமிழர்கள்  தள்ளப்படுகின்றனர்.சுய நல பிழைப்பு அரசியலினால் தமிழர்களின்  மின்சார உரிமை பலி இடப்படுகிறது.

மேற்குறிய கருத்துகள் மின்வெட்டிற்கு காரணங்களகவும், அதனால் ஏற்படும்  பிரச்சனைளகாவும்   விவாதிக்கபட்டன.

மின் பற்றாக்  குறை - தீர்வுகள் 


01. மாற்று மின் திட்டங்களை செயல் படுத்துதல்: சூரிய மின்சாரம் , காற்று ஆலை மின்சாரம், குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், அலை மின்சாரம் - இன்னும் இந்தியாவில் பிரபலம் ஆகாத ஒரு திட்டம். போன்றவற்றை அதிகரிக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

02. மேலும் மின் உற்பத்தி துறையில் ஆராய்ச்சி  மற்றும் விரிவாக்கம்  செய்ய அரசு ஊக்க படுத்த வேண்டும்.

03. நெய்வேலி மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்க வழிவகை 
செய்ய வேண்டும் .

04. கல்பாக்கம், கூடம்குளம் போன்ற அணு மின்நிலையங்களில் உற்பத்தி  ஆகும்  மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கு தரவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழகம் முழுமைக்கும் ஒரு போராட்டத்தினை  தமிழக அரசே முன்னிறுத்தி நடத்த வேண்டும்.

மின் பற்றாக்  குறை - தனிமனித கடமைகள் 

அரசாங்கத்தை  குறை சொல்வது மட்டும் அல்லாமல் தனி மனித வாழ்விலும் 
மின் பயன்பாட்டினை அவசியத்திற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். 

வீட்டில் அனைவரும் ஒரே அறையில் பல்வேறு வேலைகளை பார்த்து கொள்வது போன்ற விஷயங்கள் அனாவசியமாக மின் பயன்பாட்டை குறைக்கும்.


ஆடம்பர  மின் விளக்குகள், பிரமாண்டமான ஒளி பலகைகள்  போன்றவற்றை  தவிர்க்க வேண்டும். 

இவ்வாறாக சிந்தனை அரங்கம் " மின்சாரம் பற்றாக்  குறை - பிரச்சனைகளும்  தீர்வுகளும்" எனும் தலைப்பில் விவாதித்து உறுதி ஏற்றது. எதிர் வரும்  மாதத்தில்  மற்றொரு சமூகம் சார் பிரச்னை பற்றி விவாதிக்கவும் 
முடிவு செய்யப்பட்டது.


 


02 January 2012

நினைவுகள் -4

அப்பாவும் நானும் -2

இது நடந்தது 1986 ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று. அப்பாவுக்கு எங்கள் சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம் உண்டு. முடிந்த அளவு இரவு உணவை எங்களுடன் பேசி கொண்டே சாப்பிட விரும்புவார்.

அவர் அதிகமாக வெளியூர் பயணங்களில் இருந்ததால் எங்களை miss செய்வது போன்று அவருக்கு ஒரு எண்ணம் இருக்கலாம். இதனை அவரது கடைசி காலங்களில் என்னால் மிகவும் உணர முடிந்தது. அவர் பொதுவாகவே பயணங்களை விரும்புவார். ஆனால் கடைசி நாலைந்து வருடங்களில் பார்த்தால் இரவு வீட்டுக்கு வருவது போல் இருந்தாலே வெளியில் கிளம்பினார். மேலும் வீட்டில் இருக்கும் நேரத்திலும் பேரன்களிடமே இருக்க விரும்பினார்.

என் பிள்ளைகளின் இளமை காலத்தை நான் நிறைய miss பண்ணிட்டேன். அது போல் என் பேரபிள்ளைகளின் இளமை காலத்தை இழக்க விரும்பவில்லை என்று சொல்வார்.

இப்பொழுது சொன்னதை அன்று சொல்லாமல் நடைமுறை படுத்த பார்த்து உள்ளார். சில நாட்களில் அவர் வர நேரமாகி நாங்கள் சாப்பிட்டு விட்டாலும், எங்களை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டுதான் சாப்பிடுவார். மேலும் அன்றைக்கு செய்யபட்ட பலகாரங்களோ அல்லது எங்களுக்கு பிடித்த காய் வகைகளோ இருந்தால் எங்களுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டுதான் சாப்பிடுவார்.

ஒரு முறை எங்கள் ஆத்தா( அப்பாவின் அம்மா) வீட்டிற்கு வந்த பொழுது இதை பார்த்து விட்டு, "ஏன் உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தர மாட்டான்னு நினைச்சு நீ ஊட்டி விடுறியா" என்று கேட்டார்.

"எந்த அம்மா பிள்ளைக்கு கொடுக்காம புருசனுக்கு கொடுக்க போறா, அது அல்ல பிரச்சனை, என் பிள்ளைக்கு நான் சாப்பிடும் போது நான் கொடுக்கணும் அது தான் முக்கியம்" என்று சொன்னார்.

எனக்கு திருமணம் நடக்கும் வரையில் எனக்கும் என் தம்பிக்கும் கிடைத்தது, அதன் பிறகு எங்களுக்கு கிடைக்கவில்லை. என் பையன் பிறந்த பிறகு அவனுக்கு கிடைத்தது. ஒரு வேளை மனைவி என்று ஒருவர் வந்த பிறகு நமக்கு உரிமை குறைச்சல் என்று ஒதுங்கி விட்டாரோ என்று தெரியவில்லை.

சித்ரா பௌர்ணமி சம்பவத்தில் ஆரம்பித்து அதை பற்றி எதுவும் எழுதாமல் ஏதோ எழுதி கொண்டு போகிறேன். பல கிளைகளா பிரிந்து செல்லும் பாதையை போல் நினைவுகளும் கிளை பிரிந்து போய் விடுகிறது.

அந்த சித்ரா பௌர்ணமி அன்று நாங்கள் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசி கொண்டே உணவு சாப்பிட்டோம். புளி சாதம், தேங்காய் சாதம், என்று அம்மா விதவிதமாக செய்து வைத்து இருக்க எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டோம். அப்பாவுக்கு பொதுவா கலந்த சாதம் பிடிக்காது என்றாலும் எங்கள் பிரியத்திற்கு கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு அவரது தினப்படி அசைவ சாப்பாட்டிற்கு மாறி விடுவார். அன்றும் அது போல் தான் ஆனது.

நான் கல்லூரி முடித்து, தேர்வு முடிவுகள் வர காத்திருந்த நேரம். என்னிடம் என் எதிர் காலம் குறித்து கேட்டார்.

"நீ என்ன செய்ய போறே, மேற்கொண்டு படிக்க போறியா, இல்லை வேளைக்கு எதுவும் போக போறியா?

இப்போ நம்ம குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் நான் மேற்கொண்டு படிக்க போனால் + 2 முடித்து விட்டு அடுத்த வருடம் சங்கர் (தம்பி) வந்துடுவான். அப்பறம் நமக்கு ரொம்ப கஷ்டம் ஆகி விடும். அதற்கு பதில் நான் வேலைக்கு போய்ட்டு part time லே படிச்சுக்கிறேன். அது மட்டுமில்லாமே எனக்கு கடைசி வரையில் வேலை பார்க்க இஷ்டம் கிடையாது. கொஞ்ச நாள் கழித்து நான் தொழில் செய்யலாம் என்று நினைத்து உள்ளேன்"

சரிப்பா, உன் விருப்பம், இனிமேல் எனக்கு உன் பொருத்து ஒரு கடமை இருக்குது. உனக்கு கல்யாணம் பண்ணனும். நீ எதாவது பொண்ணு கின்னு பார்த்து வைத்து இருக்கிறாயா?

என்னப்பா, இப்படி எல்லாம் கேக்கறிங்க? அப்படி எதுவும் கிடையாது என்று நான் பதில் சொன்னேன்.

இப்போ இல்லாமே இருக்கலாம் எதிர் காலத்தில் வந்தால் எனக்கு சொல்லு. நீ பாட்டுக்கு இழுத்துகிட்டு ஓடி நாங்கள் தேடி தவிப்பது போல் வைத்து விடாதே என்று சிரித்து கொண்டே சொன்னார்.

"நீ இனிமே ஒரு புது வாழ்கையை நோக்கி போக போறே, எங்கே வேலைக்கு சேர போறியோ அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாய் இரு, இந்த சம்பளத்திற்கு இவ்வளவு வேலை செய்தால் போதும் என்று எப்போதும் நினைக்காதே. அப்படி ஒரு நினைப்பு வந்தால் அன்னைக்கே அந்த வேலையில் இருந்து வெளியில் வந்து விடு.

உனக்கு கீழே வேலை பார்பவர்களை உனக்கு மேலே உள்ளவன் உன்னை எப்படி நடத்தணும் என்று நினைக்கிறாயோ அப்படி நடத்து என்று சொன்னார்.

என் வாழ்கையில் அதன் பிறகு அவர் இறக்கும் வரையில் என் தொழில் சம்பந்தமாக எந்த ஆலோசனையும் சொன்னதே கிடையாது. யாரவது கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது அவன் கிட்டே கேட்டுகோங்க என்று சொல்லி விடுவார்.

தொழில் நஷ்டம் வந்து நான் தடுமாறிய போதாகட்டும், 38 வயதில் factory போட போகிறேன் என்று குதித்த போதும். அவனுக்கு தெரியும். அவன் சாதிப்பான் என்றே எல்லோரிடமும் சொல்வார். என்னிடம் மட்டும் சொன்னதே இல்லை.

அவர் வருடம் தோறும் என் நிறுவனத்தில் விரும்பி கேட்டது புது வருடத்திற்கு காலண்டர்கள் மட்டுமே. இந்த வருடம் உள்ளது காலண்டர்கள் அவர்தான் இல்லை.

Followers